அஸ்வின் காயம்
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அஸ்வின் முதல் போட்டியில் ஆடினார். அந்த போட்டியில் காயம் ஏற்பட்டதால் அடுத்த மூன்று போட்டிகளில் அவர் பங்கேற்க முடியவில்லை. குறிப்பாக நான்காவது போட்டியில் இந்தியா இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களோடு களம் இறங்க வேண்டிய கட்டாயம் இருந்தது. அப்போதும் அஸ்வின் காயம் காரணமாக களம் இறங்கவில்லை.
கங்குலி நேர்மையான விமர்சனம்
இது பற்றி சில முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்தனர். கங்குலி இது பற்றி கூறுகையில், அஸ்வின் முக்கிய தொடர்களில் காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். காயத்தால் தன் முக்கியத்துவத்தை இழந்து வருகிறார் என மேலோட்டமான விமர்சனத்தை வைத்தார்.
முதல் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப்
அதே சமயம் ஹர்பஜன் கூறுகையில் அஸ்வின் அணிக்கு தேவையான நேரத்தில் காயத்தில் இருந்ததாகவும், அதனால் வாய்ப்பு பெற்ற குல்தீப் யாதவ் சிறப்பாக பந்து வீசி அணியின் முதல் சுழற்பந்துவீச்சாளர் என்ற நிலையை அடைந்துவிட்டார் எனவும் கூறினார்.
மட்டம் தட்டினார்
மேலும், அஸ்வின் இரண்டு வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் காயத்தில் இருந்துள்ளார். குல்தீப் இனி நம்பர் 1 சுழற் பந்துவீச்சாளர். ஜடேஜா நம்பர் 2 சுழற் பந்துவீச்சாளர். இவர்கள் இருவரும் இனி இந்தியா எங்கே ஆடினாலும் பங்கேற்பார்கள் என அஸ்வினை மிகவும் மட்டம் தட்டி பேசினார் ஹர்பஜன்.
அது என்ன நம்பர் 1?
இதை கண்டு கோபமடைந்துள்ள பாரூக் இன்ஜினியர், "அது என்ன முதல் சுழற் பந்துவீச்சாளர், இரண்டாம் சுழற் பந்துவீச்சாளர்? சுழற் பந்துவீச்சாளர் என்றால் சுழற் பந்துவீச்சாளர்." என ஹர்பஜன் கருத்தை மறுத்துள்ளார்.
அஸ்வினை குறை கூறுகிறார்
மேலும், "அஸ்வின் சிறந்த பந்துவீச்சாளர். என்னைப் பொறுத்தவரை ஹர்பஜன் அஸ்வினை குறை கூறுகிறார். பொது வெளியில் உங்களுக்கு மாற்றாக வந்த ஒரு வீரரை குறை கூறுவது சரியல்ல. இது தோனி, ரிஷப் பண்ட்டை குறை கூறுவது போல உள்ளது" என சாடியுள்ளார்.
என்ன காரணம்?
ஹர்பஜன் இந்தியாவின் முன்னணி சுழற் பந்துவீச்சாளராக இருந்த போது அஸ்வின் உள்ளே நுழைந்தார். குறுகிய காலத்தில் ஹர்பஜனை முந்தி இந்திய அணியில் நிரந்தர இடம் பிடித்தார் அஸ்வின். ஹர்பஜன் அந்த காழ்ப்புணர்ச்சியில் அல்லது பொறாமையில் தான் இப்படி பேசுகிறாரா?