மாயன்க், புஜாரா அபாரம்
சிட்னியில் நடைபெறும் நான்காவது டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்க்ஸில் பேட்டிங் தேர்வு செய்தது. துவக்க வீரர் மாயன்க் அகர்வால் 77 ரன்கள் அடித்தார். அடுத்து புஜாரா 193 ரன்கள் அடித்து 7 ரன்களில் இரட்டை சதத்தை தவற விட்டார். ஹனுமா விஹாரி 42 ரன்கள் அடித்து புஜாராவுக்கு கை கொடுத்தார்.
ரிஷப் சதம், இந்தியா டிக்ளர்
அடுத்து ரிஷப் பண்ட் தன் இரண்டாவது டெஸ்ட் சதத்தை அடித்து பட்டையைக் கிளப்பினார். அவர் 159 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜடேஜா 81 ரன்கள் அடித்தார். ஏழாவது விக்கெட்டாக ஜடேஜா ஆட்டமிழந்த போது இந்தியா 622 ரன்கள் அடித்து இருந்தது. அத்துடன் இந்திய அணியின் முதல் இன்னிங்க்ஸ்-ஐ டிக்ளர் செய்தார் கேப்டன் கோலி.
ஆஸ்திரேலிய பந்து வீச்சு மோசம்
இந்திய அணியில் சொதப்பிய பேட்ஸ்மேன்கள் ராகுல் 9, கோலி 23, ரஹானே 18 ஆகியோர் மட்டுமே. ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. விக்கெட் வீழ்த்த தடுமாறினர். ரன்களையும் வாரி இறைத்தனர்.
ஸ்டார்க் அதிர்ச்சி
ஆஸ்திரேலியாவின் முக்கிய பந்துவீச்சாளர் ஸ்டார்க் ஓவருக்கு 4.73 ரன்கள் கொடுத்து அதிர்ச்சி அளித்தார். மற்றொரு வீரர் லாபுஷாக்னே ஓவருக்கு 4.75 ரன்கள் கொடுத்து இருந்தார். ஹேசல்வுட் 2, நாதன் லியோன் 4 விக்கெட்கள் வீழ்த்தியதோடு கட்டுகோப்பாக பந்து வீசினர்.
ஆஸி. முதல் இன்னிங்க்ஸ்
இரண்டாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா தன் முதல் இன்னிங்க்ஸில் 24 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி ஆடி வருகிறது. மார்கஸ் ஹாரிஸ் 19, கவாஜா 5 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் களத்தில் நிற்கின்றனர். இன்னும் மூன்று நாள் ஆட்டம் மீதமுள்ளது.
உறுதியாக வெல்லும்
நான்கு போட்டிகள் கொண்ட ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில், மூன்று போட்டிகள் முடிவில் இந்தியா 2-1 என தொடரில் முன்னிலையில் இருந்தது. நான்காவது டெஸ்டில் வெற்றி அல்லது டிரா பெற்றால் இந்தியா தொடரை வெல்லும் என்ற சூழலில், இந்தியா நான்காம் போட்டியில் முதல் இன்னிங்க்ஸில் 622 ரன்கள் குவித்துள்ளது. இதன் மூலம் இந்தியா தொடரை உறுதியாக வெல்லும் என ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.
இன்னிங்க்ஸ் வெற்றி கிடைக்குமா?
ஆஸ்திரேலியா தன் முதல் இன்னிங்க்ஸில் நன்றாக பேட்டிங் ஆடினால் இந்த போட்டி டிரா ஆக அதிக வாய்ப்புள்ளது. ஒருவேளை இந்தியா பந்து வீச்சில் ஆதிக்கம் செலுத்தி விக்கெட்களை விரைவாக வீழ்த்தினால் இந்தியா இந்த போட்டியில் இன்னிங்க்ஸ் வெற்றி பெறவும் அதிக வாய்ப்புள்ளது. இதில் எது நடந்தாலும் இந்தியா தொடரை கைப்பற்றி விடும்.