டெக்னிக்
அவர் எத்தனை சிறந்த டெக்னிக்குடன் பந்து வீசுகிறார் என கூறிய ஜேசன் கில்லெஸ்பி, இந்திய அணி அவர் இல்லாமல் தவிக்கும் என்றார். குறிப்பாக அவரது அனுபவம் இல்லாமல் ஆஸ்திரேலிய மண்ணில் வேகப் பந்துவீச்சில் இந்தியா பலவீனம் அடையக் கூடும்.
ஆஸ்திரேலிய தொடர்
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன ஒருநாள் தொடர், டி20 தொடர் மற்றும் டெஸ்ட் தொடர் வரும் நவம்பர் கடைசி வாரத்தில் துவங்க உள்ளது. இதில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தான் முக்கியமான தொடர்.
முக்கியமான தொடர்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியாக இந்த டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. கடந்த முறை ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரில் இந்தியா வெற்றி பெற்று இருந்தது. அதனால், ஆஸ்திரேலியா தற்போது பழி வாங்க காத்திருக்கிறது.
அணி அறிவிப்பு
இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அந்த இந்திய அணியில் ரோஹித் சர்மா, இஷாந்த் சர்மா இடம் பெறவில்லை. இருவரும் மூத்த வீரர்கள். இதில் இஷாந்த் சர்மா தான் தற்போது ஆடி வரும் இந்திய வீரர்களில் அதிக டெஸ்ட் போட்டிகளில் ஆடியவர்.
ஏன் நீக்கப்பட்டார்?
இஷாந்த் சர்மா காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியின் கண்காணிப்பில் காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். அவர் முழுமையாக மீண்ட பின்னரே அவர் மீண்டும் இந்திய அணியில் இடம் பெறுவாரா? என்பது தெரிய வரும்.
பலவீனம்
இஷாந்த் சர்மா இல்லாமல் இந்திய அணி பலவீனம் அடைந்துள்ளது. முகமது ஷமி., பும்ரா, இஷாந்த் சர்மா கூட்டணி டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகின் அச்சுறுத்தும் கூட்டணியாக கருதப்படுகிறது. அவர்கள் மூவரும் சேர்ந்து பந்து வீசினால் எதிரணிகள் தடுமாறும்.
கில்லெஸ்பி என்ன சொன்னார்?
இந்த நிலையில், இஷாந்த் சர்மா நீக்கம் குறித்து பேசினார் முன்னாள் ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஜேசன் கில்லெஸ்பி. இஷாந்த் சர்மா, புவனேஸ்வர் குமார் காயமடைந்து இருப்பது இந்திய அணிக்கு பெரும் இழப்பு. ஆஸ்திரேலிய சூழ்நிலையில் இஷாந்த் சர்மா இல்லாததை இந்தியா உணரும் என்றார்.
பந்துவீச்சு முறை
மேலும், இஷாந்த் சர்மா கடந்த சில ஆண்டுகளாக மிக அற்புதமாக பந்து வீசி வருகிறார். பந்துவீச்சில் பெரிய வித்தியாசத்தை கொண்டு வருகிறார். வலது கை வேகப் பந்துவீச்சாளர்கள் கிரீஸ்-க்கு தூரமாக இருந்து வந்து வலது கை பேட்ஸ்மேனுக்கு இன்ஸ்விங் வீச மாட்டார்கள். ஆனால், அதை இஷாந்த் சர்மா செய்து வருவதாக அவர் கூறினார்.
மீண்டும் ஆட வாய்ப்பு?
இஷாந்த் சர்மா டிசம்பர் மாதத்திற்கு முன்பே காயத்தில் இருந்து மீண்டால் டெஸ்ட் தொடரில் அவர் ஆட அதிக வாய்ப்பு உள்ளது. ஆனாலும், குவாரன்டைன் உள்ளிட்ட விதிகளை தாண்டி தான் அவர் அணியில் இடம் பெற முடியும்.