இந்தியா முன்னிலை
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதன் முடிவில் இந்தியா 2-1 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. நான்காவது மற்றும் கடைசிப் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற உள்ளது.
அணித் தேர்வில் அதிக கவனம்
இந்த போட்டியில் இந்தியா வெற்றி அல்லது டிரா செய்யும் பட்சத்தில் தொடரை கைப்பற்ற முடியும். ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் தொடரை சமன் செய்யும். இந்த சூழ்நிலையில், இரு அணிகளும் அணித் தேர்வில் அதிக கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.
மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள்
பிசிசிஐ சிட்னி டெஸ்டுக்கான 13 வீரர்கள் கொண்ட இந்திய அணியை அறிவித்தது. சிட்னி டெஸ்டில் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தக் கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உத்தேச அணியில் மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
குல்தீப் யாதவ் மற்றும் ஜடேஜா
இந்த மூவரில் அஸ்வின் காயத்தில் இருந்து முழுவதுமாக குணமடையாத காரணத்தால் நான்காவது டெஸ்டில் களமிறங்குவது சந்தேகமே. அஸ்வின் ஆடாத பட்சத்தில் குல்தீப் யாதவ் மற்றும் ஜடேஜா களமிறங்க அதிக வாய்ப்புள்ளது.
ஆறாவது இடத்தில் ஹனுமா
மெல்போர்ன் டெஸ்டில் ஹனுமா விஹாரி - மாயன்க் அகர்வால் துவக்க வீரர்களாக களமிறங்கினர். ஹனுமா துவக்க வீரராக சரியாக ரன் குவிக்கவில்லை. அதனால், சிட்னி டெஸ்டில் ஹனுமா தான் வழக்கமாக களம் இறங்கும் ஆறாவது இடத்துக்கே மீண்டும் வருவார் என தெரிகிறது.
மீண்டும் ராகுல்
முதல் இரண்டு டெஸ்ட்களில் சரியாக ரன் குவிக்காததால் துவக்க வீரர் ராகுல் மூன்றாவது டெஸ்டில் வாய்ப்பை இழந்தார். அவருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ராகுலுக்கு அதிக வாய்ப்புகள் கொடுத்ததும் அவர் தன்னை நிரூபிக்காத நிலையில் மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பேட்டிங் யார் யார்?
துவக்க வீரர்களாக மாயன்க் அகர்வால், ராகுல், மிடில் ஆர்டரில் புஜாரா, கோலி, ரஹானே, ஹனுமா விஹாரி களமிறங்க உள்ளனர். பேட்டிங்கில் ராகுல் தவிர மற்ற அனைவர் மீதும் நம்பிக்கை உள்ளது. 3வது போட்டியில் ஆடிய ரோஹித் சர்மா தனக்கு குழந்தை பிறந்துள்ளதால் இந்தியா விரைந்துள்ளார். அவர் சிட்னி டெஸ்டில் ஆடவில்லை.
அஸ்வின் இடம்?
அஸ்வின் இடம் பெறுவது பற்றிய முடிவை சிட்னி டெஸ்டின் முதல் நாள் காலை முடிவு செய்யப்படும் என பிசிசிஐ அணிப் பட்டியலில் குறிப்பிட்டுள்ளது. எனினும், சுழற் பந்துவீச்சில் அஸ்வின் இடம் பெற அதிக வாய்ப்பில்லை. எனவே, ஜடேஜா, குல்தீப் யாதவ் இடம் பெறுவர்.
வேகப் பந்துவீச்சில் யார் யார்?
வேகப் பந்துவீச்சில் பும்ரா, ஷமி, உமேஷ் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இரண்டு வேகப் பந்துவீச்சாளர்கள் மட்டுமே அணியில் இடம் பெறுவர் என கருதப்படுவதால் உமேஷ் களமிறங்கும் வாய்ப்பு பெறுவது சந்தேகமே. 3வது டெஸ்டில் ஆடிய இஷாந்த் சர்மா பெயர் உத்தேச அணியில் இடம் பெறவில்லை.
|
உத்தேச அணி விவரம்
பிசிசிஐ அறிவித்துள்ள சிட்னி டெஸ்டுக்கான உத்தேச அணி - கோலி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்), ராகுல், மாயன்க் அகர்வால், புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட், ஜடேஜா, குல்தீப் யாதவ், அஸ்வின், ஷமி, பும்ரா, உமேஷ் யாதவ்.