ஆஸ்திரேலிய தொடர்
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன கிரிக்கெட் தொடர் நவம்பர் 27 அன்று துவங்க உள்ளது. முதலில் ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடர் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து நான்கு போட்டிகள் கொண்ட முக்கியமான டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது.
டெஸ்ட் தொடர் சிக்கல்
இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா வெற்றி பெறுவதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை நோக்கி முன்னேற முடியும். இந்தியா பலமான அணியுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதில் தான் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கோலி இல்லாத அணி
விராட் கோலி குழந்தை பிறக்க உள்ளதால் முதல் டெஸ்ட் முடிந்த உடன் இந்தியா செல்ல உள்ளார். விராட் கோலி இல்லாத இந்திய அணி பேட்டிங்கில் பலவீனம் அடையும். அதை எப்படி சரி செய்வது? எப்படி அணியை மாற்றி அமைப்பது? என கேள்விகள் எழுந்துள்ளன.
புஜாரா, ரஹானே
பேட்டிங்கில் விராட் கோலி இல்லாத நிலையில், புஜாரா, ரஹானே அணியில் முக்கிய இடத்தை பெறுவர். அவர்களே டெஸ்ட் அணியின் அனுபவ பேட்ஸ்மேன்கள். கோலி இல்லாத இடைவெளியை அவர்களால் மட்டுமே நிரப்ப முடியும்.
இடமே கிடைக்காது
கடந்த முறை ஆஸ்திரேலிய தொடரில் புஜாரா, ரிஷப் பண்ட் தான் அதிக ரன்கள் எடுத்தனர். ரஹானேவும் ஓரளவு கை கொடுத்தார். இந்த நிலையில், பண்ட்டை இந்த முறை நம்ப முடியாது. அவருக்கு அணியில் இடம் கிடைப்பதே சந்தேகம் தான். எனவே, புஜாரா, ரஹானே மீது கவனம் திரும்பி உள்ளது.
அந்த நால்வர்
அவர்கள் இல்லாமல், ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி, விரிதிமான் சாஹா பேட்டிங்கில் அணிக்கு கை கொடுக்க வேண்டும். இது மிகவும் சிக்கலான விஷயம். இவர்கள் அனைவருமே டெஸ்ட் போட்டிகளில் ஒன்று அனுபவம் குறைந்தவர்கள் அல்லது வெளிநாட்டு மண்ணில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாதவர்கள்.
ரவி சாஸ்திரி கையில் அணி
இந்த நிலையில், கோலி இல்லாத நிலையில் பேட்டிங்கை சரியாககட்டமைக்க வேண்டிய நிலை உள்ளது. அதை செய்ய உள்ளது அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தான். விராட் கோலி இல்லாத நிலையில், அணியின் முடிவுகளை அவர்தான் எடுப்பார் என கருதப்படுகிறது.
என்ன நடக்கும்?
கடைசி மூன்று போட்டிகளுக்கு ரஹானே கேப்டனாக இருந்தாலும் ரவி சாஸ்திரி தான் அணியை முடிவு செய்வார். ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் வெளிநாட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில், அதை இந்த தொடரில் போக்க வேண்டும்.
ஆஸ்திரேலியா மகிழ்ச்சி
விராட் கோலி இல்லாதது எப்படி இந்திய அணிக்கு தலைவலியாக மாறி உள்ளதோ அதே போல ஆஸ்திரேலிய அணிக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த அணி கடந்த முறை ஏற்பட்ட தோல்விக்கு பழி தீர்க்க காத்துக் கொண்டுள்ளது.