ரோஹித் சர்மா காயம்
ரோஹித் சர்மா காயம் காரணமாக ஐபிஎல் தொடர் முடிந்த உடன் இந்தியா அனுப்பி வைக்கப்பட்டார். அங்கே அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தன் உடற்தகுதியை நிரூபிக்க பயிற்சிகள் மேற்கொண்டு வந்தார். அவர் டிசம்பர் இரண்டாம் வாரத்தில் தான் ஆஸ்திரேலியா செல்ல தேசிய கிரிக்கெட் அகாடமி ஒப்புதல் அளிக்கும் என கூறப்படுகிறது.
இஷாந்த் சர்மா நிலை
மறுபுறம் இஷாந்த் சர்மா கடந்த ஒன்றரை மாதமாக தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அவரையும் இன்னும் ஒரு நாளில் 20 ஓவர்கள் பந்து வீச தகுதி பெறவில்லை எனக் கூறி தேசிய கிரிக்கெட் அகாடமி நிறுத்தி வைத்துள்ளது.
எப்போது செல்லலாம்?
ரோஹித் சர்மா டிசம்பர் இரண்டாம் வாரத்திலும், இஷாந்த் சர்மா நான்கு வார பயிற்சி பெற்ற பின்னும் தான் டெஸ்ட் போட்டிகளில் விளையாட தகுதி பெறுவார்கள் என கூறப்படுகிறது. அவர்கள் இப்போதே ஆஸ்திரேலியா சென்றாலும் அவர்கள் இரண்டு வாரம் குவாரன்டைனில் இருக்க வேண்டும்.
நான்கு நாட்கள் கெடு
குவாரன்டைன் சமயத்தில் அவர்கள் பயிற்சியில் ஈடுபட முடியாது. அதனால், அவர்கள் இன்னும் நான்கு நாட்களுக்குள் ஆஸ்திரேலியாவில் இருந்தால் மட்டுமே குவாரன்டைன் முடிந்து, பயிற்சி மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் பங்கேற்க முடியும். ஆனால், அவர்களால் நன்கு நாட்களுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கேள்வி
ரோஹித் சர்மாவை முன்பே ஆஸ்திரேலியா அனுப்பாமல் ஏன் இந்தியா அனுப்பி வைத்தது பிசிசிஐ என்ற கேள்வி எழுந்துள்ளது. அவரை இந்தியா அனுப்பிவிட்டு தற்போது அவரால் ஆஸ்திரேலியா செல்ல முடியாது, சென்றாலும் குவாரன்டைன் காரணமாக பயிற்சி செய்ய முடியாது என அவரை இரண்டு டெஸ்ட்களில் நீக்கி உள்ளது.
சிக்கலில் இந்திய அணி
முதல் டெஸ்ட் போட்டிக்கு பின் விராட் கோலியும் தொடரில் இருந்து விடுப்பு எடுத்துக் கொள்வார். தற்போது முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா, இஷாந்த் சர்மா ஆட முடியாது. மூன்று முக்கிய வீரர்கள் இல்லாமல் இந்திய அணி சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது.
கடைசி இரண்டு டெஸ்ட்
கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா, இஷாந்த் சர்மா இடம் பெறுவார்களா? இஷாந்த் சர்மா இடம் பெறுவதில் சிக்கல் உள்ளது. அவர் இன்னும் தன் உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும் என கூறப்படுகிறது. ரோஹித் சர்மா இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால், அவரை போட்டிகளில் ஆட வைக்கும் முடிவை அணி நிர்வாகம் தான் எடுக்கும்.
மாற்று வீரர்
இஷாந்த் சர்மாவுக்கு ஏற்கனவே மாற்று வீரராக முகமது சிராஜ் அணியில் இடம் பெற்றுள்ளார். ரோஹித் சர்மாவுக்கு மாற்று வீரராக ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் இடம் பிடித்துள்ளார். அவர் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆகவில்லை.