என்ன நடந்தது?
ரோஹித் சர்மா தசைப்பிடிப்பால் ஐபிஎல் தொடரில் அவதிப்பட்டு வந்தார். அவர் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு முன் முழு உடற்தகுதி பெற்று விடுவார் என்றாலும், குளறுபடியான முடிவுகளை எடுத்து பிசிசிஐ அவரை தற்போது முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்கி உள்ளது.
விளக்கம் அளிக்கவில்லை
முதலில் ஆஸ்திரேலிய தொடரில் இருந்து அவர் முற்றிலுமாக நீக்கப்பட்டு இருந்தார். அப்போது அவர் காயம் குறித்து விளக்கம் அளிக்குமாறு பலரும் கேட்டும், பிசிசிஐ எந்த விளக்கமும் கூறவில்லை. அதன் பின் ஐபிஎல் போட்டிகளில் அவர் ஆடிய பின்னரே டெஸ்ட் அணியில் மட்டும் சேர்க்கப்பட்டார்.
நிரூபித்தால் தான் வாய்ப்பு
அதன் பின் 70 சதவீத உடற்தகுதியுடன் இருந்த அவரை இந்தியா அனுப்பி உடற்தகுதியை முழுவதுமாக நிரூபித்தால் தான் வாய்ப்பு என்றார்கள். அவர் தற்போது முழு உடற்தகுதியுடன் இருந்தாலும் இரு வார பயிற்சிக்கு பின்பே ஒப்புதல் அளிக்க முடியும் என தேசிய கிரிக்கெட் அகாடமி கூறி உள்ளது.
குவாரன்டைன் உள்ளது
இந்தியாவுக்கு அனுப்பிய அதே பிசிசிஐ தற்போது, அவர் ஆஸ்திரேலியாவில் இரு வார குவாரன்டைன் வேறு செய்ய வேண்டும், அதன் பின் பயிற்சி செய்து உடற்தகுதியை அவர் நிரூபிக்கும் முன் டெஸ்ட் தொடர் துவங்கி விடும் என்பதால் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து அவரை நீக்கி உள்ளது.
மாறுபட்ட அணுகுமுறை
அதே சமயம் இரண்டு தசைப்பிடிப்புகளுடன் இருந்த விக்கெட் கீப்பர் சாஹா நேராக ஆஸ்திரேலியா செல்ல அனுமதிக்கப்பட்டார். அங்கேயே அவர் உடற்தகுதியை நிரூபித்து தற்போது போட்டிகளில் பங்கேற்க இருக்கிறார். ஏன் இந்த மாறுபட்ட அணுகுமுறை? ரோஹித் சர்மாவை பிசிசிஐ குறி வைத்து நீக்க முயற்சி செய்கிறதா? என்ற கேள்வி இங்கே தான் எழுகிறது.
விராட் கோலி - ரோஹித் சர்மா
இதன் பின்னணியில் ரோஹித் சர்மா - விராட் கோலி விரிசல் இருக்கலாம் என சிலர் கூறி வருகின்றனர். 2019 உலகக்கோப்பை தொடரின் முடிவில் இந்தியா அரை இறுதியுடன் தோல்வி அடைந்து வெளியேறிய போது ரோஹித் சர்மா - விராட் கோலி இடையே மோதல் இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது.
நிலைமை மாறி இருக்கலாம்
அதன் பின் இருவரும் நன்றாக பழகுவது போலவே தெரிந்த நிலையில், 2020 ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா மும்பை அணி கேப்டனாக சிறப்பாக செயல்பட்டதாலும், கோப்பை வென்றதாலும் பின் நிலைமை மாறி இருக்கலாம் என்கிறார்கள்.
கோலிக்கு அதிகாரம் உள்ளதா?
ஆனால், ரோஹித் போன்ற தனக்கு போட்டியாக உள்ள வீரரை நீக்கும் அதிகாரம் கோலிக்கு உள்ளதா? பிசிசிஐயில் விராட் கோலியால் இத்தனை அதிகாரம் செலுத்த முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதைத் தாண்டி பிசிசிஐ அரசியல் இருக்கலாம்.
பிசிசிஐ அரசியல்
பிசிசிஐயில் ஆதி காலம் தொட்டே லாபிக்கள் உண்டு. மும்பை லாபி தான் இதில் ஆதிக்கம் செலுத்தும் லாபி. ஆனால், அதை முதன் முதலில் உடைத்தது கொல்கத்தாவின் ஜக்மோகன் டால்மியா தான். அவரது வழியில் வந்தவர் தான் கங்குலி. கிட்டத்தட்ட அவரது சீடர் என்றும் சொல்லலாம்.
கங்குலி முடிவு என்ன?
அந்த வகையில் கங்குலி தலைமையில் இயங்கும் பிசிசிஐ மும்பை மாநிலத்தின் முக்கிய வீரரான ரோஹித் சர்மாவை குறி வைத்துள்ளதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால், கங்குலி வீரர்களை அப்படி பிரித்துப் பார்ப்பவர் அல்ல. அவரைத் தாண்டி பிசிசிஐயில் குழப்பத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது என்பதால், அப்படி எதுவும் நடக்கலாம்.