கோட்டை விட்டனர்
தோனி இல்லாத நிலையில், நான்காவது போட்டியில் இந்திய அணியில் பதற்ற நிலை இருந்தது. குறிப்பாக இந்திய வீரர்கள் பல பீல்டிங் வாய்ப்புகளில் கோட்டை விட்டனர். தோனிக்கு பதிலாக அணியில் இடம் பெற்ற விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் மூன்று விக்கெட் வீழ்த்தும் வாய்ப்புகளில் சொதப்பினார்.
பதற்ற நிலையில் கோலி
கேப்டன் கோலி, பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவதிலும், முடிவுகள் எடுப்பதிலும் பதற்ற நிலையில் தான் இருந்தார். இந்திய வீரர்கள் பீல்டிங்கில் சொதப்பிய போதும், ரிஷப் பண்ட் கோட்டை விட்ட போதும் கோலி அமைதி இழந்து காணப்பட்டார்.
பாதி கேப்டன் தோனி
இதை குறிப்பிட்ட பிஷன் சிங் பேடி, தோனி இல்லாதது நான்காவது போட்டியில் பேட்டிங்கிலும், ஸ்டம்ப்புகளுக்கு பின்னேயும், களத்திலும் நன்றாக உணரப்பட்டது. அவருக்கு ஏன் ஓய்வு கொடுத்தார்கள் என்பது தெரியவில்லை. அவர் தான் பாதி கேப்டன் என்றார்.
கேப்டனுக்கு அவர் தேவை
மேலும், அவருக்கு வயதானாலும், அணிக்கு அவர் தேவைப்படுகிறார். அணியை அமைதிப்படுத்துகிறார். கேப்டனுக்கு அவர் தேவை. அவர் இல்லாமல் அவர் அமைதியற்று இருக்கிறார். அது நல்ல அறிகுறி அல்ல. என்றும் கூறினார்.
மூன்றாவது போட்டியில் தோனி
மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சில் முதல் பாதியில் கைவிட்டாலும், இரண்டாம் பாதியில் கை கொடுத்தது. அப்போது பல முடிவுகளை தோனி தான் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரன்களை தடுத்த தோனி
மூன்றாவது போட்டியில் ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா 350 ரன்களுக்கும் மேல் எடுக்கும் என்ற நிலை இருந்தது. அதை உடைத்து அந்த அணியை 313 ரன்களுடன் தடுத்ததில் தோனியின் பங்கு அதிகம். எனினும், அந்த போட்டியில் இந்திய அணி தோற்கக் காரணம், பேட்டிங் சொதப்பல் தான்.
4வது போட்டியில்..
அதே சமயம், நான்காவது போட்டியில் தோனி இல்லாத நிலையில் இந்திய அணி 358 ரன்கள் குவித்தும் அதை தற்காத்துக் கொண்டு வெற்றி பெற முடியவில்லை. கடைசி 10 ஓவர்களுக்கு முன்பு வரை இந்தியா தான் வெற்றி பெறும் என்ற நிலையே இருந்தது.
தோனி இல்லையே!
ஆனால், 46 முதல் 48வது ஓவர் வரை இந்திய அணி ரன்களை வாரி இறைத்து வெற்றியை பறிகொடுத்தது. அந்த நேரத்தில் தோனி இருந்திருந்தால் அணியை அமைதிப்படுத்தி இருப்பார்.
இனி என்ன?
ஆனால், இனி இதை பேசி ஒரு பயனும் இல்லை. தோனி ஐந்தாவது போட்டியிலும் ஆட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்தாவது போட்டியில் வெல்லும் அணி தொடரைக் கைப்பற்றும் என்ற நிலையில், கோலி அணியை அமைதியுடன், பதற்றப்படாமல் வழி நடத்த வேண்டும்.