இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன டெஸ்ட் தொடர் டிசம்பர் மாதம் துவங்க உள்ளது. நான்கு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி ஒருநாள் மற்றும் டி20 அணி அறிவிப்புடன் முன்னதாகவே வெளியானது. அதில் ரோஹித் நீக்கம் ஒரு பக்கம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கேஎல் ராகுல் துணை கேப்டன்
மறுபுறம் ஒருநாள் அணி மற்றும் டி20 அணியின் துணை கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டார். அதுவும் சர்ச்சை ஆனது. ரோஹித் சர்மா காயம் குணமடைந்து அணிக்கு திரும்ப வாய்ப்புள்ள நிலையில் எப்படி புதிய துணை கேப்டனை நியமிக்கலாம் என்ற கேள்வி எழுந்தது.
டெஸ்ட் அணியில்..
அதையும் தாண்டி மற்றொரு விவாதத்தை கிளப்பினார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர். கேஎல் ராகுல் ஐபிஎல் செயல்பாட்டை வைத்து டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் டெஸ்ட் அணியில் மோசமாகவே செயல்பட்டுள்ளார் என அவர் கூறி இருந்தார்.
செயல்பாடு எப்படி?
2018 டெஸ்ட் தொடருக்கு பின் அவர் இந்திய மண்ணில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் 37 ரன்கள் எடுத்தார். அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தொடர்களில் 57 மற்றும் 101 ரன்களே எடுத்திருந்தார். கடைசியாக இந்தியா ஆடிய நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து அவர் நீக்கப்பட்டு இருந்தார்.
மஞ்ச்ரேக்கர் குற்றச்சாட்டு
சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இது குறித்து எழுதிய பதிவில், இந்திய டெஸ்ட் அணிக்கு ஐபிஎல் செயல்பாட்டை வைத்து தேர்வு செய்து தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என தேர்வுக் குழுவை கடுமையாக சாடி இருந்தார்.
ஒப்புக் கொண்ட ரசிகர்கள்
சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்துக்களை எப்போதும் எதிர்க்கும் பெரும் கிரிக்கெட் ரசிகர் கூட்டத்தில் பலர் இந்த கருத்தை ஏற்றுக் கொண்டனர். அவர் சொல்லும் கருத்து நியாயமாக இருந்தது. சிலர் ராகுலின் ஒட்டுமொத்த சர்வதேச செயல்பாட்டை பார்க்க வேண்டும், முந்தைய டெஸ்ட் போட்டிகளை மட்டும் வைத்து அவரை எடை போடக் கூடாது என்றனர்.
ஸ்ரீகாந்த் விளாசல்
இந்த நிலையில், முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அவரை விளாசி உள்ளார். கேஎல் ராகுலின் டெஸ்ட் அணித் தேர்வை கேள்வி கேட்பதா? அவர் டெஸ்டில் நன்றாக ஆடி உள்ளார். மஞ்ச்ரேக்கர் கருத்தை ஒப்புக் கொள்ளவே மாட்டேன் என்றார்.
வெறும் குப்பை
சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சொல்வது வெறும் குப்பை. ராகுல் தொடர்ந்து சிறப்பாக ஆடவில்லை. ஆனால், அவர் ஆஸ்திரேலியாவில் தன் அறிமுகப் போட்டியில் சதம் அடித்துள்ளார். அவர் வேகப் பந்துவீச்சை நன்றாக ஆடக் கூடியவர்.
எல்லாமே பாம்பே தான்
சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பம்பாயை தாண்டி சிந்திக்காதவர். அது தான் பிரச்சனை. நாம் நடுநிலையாக பேசிக் கொண்டிருக்கிறோம். மஞ்ச்ரேக்கர் போன்றவர்களுக்கு எல்லாமே பம்பாய் தான். அவர்கள் பம்பாயை தாண்டி சிந்திக்க வேண்டும் என விளாசினார் ஸ்ரீகாந்த்.
சர்ச்சை
ஸ்ரீகாந்த் கருத்தால் இந்த விவகாரம் மேலும் சர்ச்சையாக மாறி உள்ளது. சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சொல்வதில் ஓரளவு உண்மை உள்ளது. ஆனாலும், ஸ்ரீகாந்த் அவரை கடுமையாக விளாசி உள்ளார். அவர் மும்பை மாநில வீரர்களுக்கு ஆதரவாக மட்டுமே பேசி வருகிறார் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.