முகமது சிராஜ்
வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் இந்திய ஒருநாள் அணி மற்றும் டி20 அணியில் ஏற்கனவே இடம் பெற்ற வீரர். அப்போது தன் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளவில்லை. தற்போது 2020 ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு மீண்டும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார்.
டெஸ்ட் அணியில் இடம்
இந்த முறை அவருக்கு ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம் கிடைக்கவில்லை. மாறாக, டெஸ்ட் அணியில் இடம் கிடைத்துள்ளது. இஷாந்த் சர்மா காயம் காரணமாக இடம் பெறுவது சந்தேகமாக உள்ள நிலையில் முகமது சிராஜ் வாய்ப்பு பெற்றுள்ளார்.
நுரையீரல் பிரச்சனை
அவரது தந்தை கோஸ் ஹைதராபாத்தில் ஆட்டோ ஓட்டி தன் மகனை கிரிக்கெட் வீரராக மாற்றியவர். அவருக்கு நுரையீரல் பிரச்சனை இருந்தது. ஐபிஎல் தொடரின் போதே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மீண்டும் வீடு திரும்பி இருந்தார்.
தந்தை மரணம்
சிராஜ் இந்திய அணியுடன் இணைந்து ஆஸ்திரேலியா கிளம்பிச் சென்ற நிலையில் அவரது தந்தை மீண்டும் நுரையீரல் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 53 ஆகிறது. தன் தந்தை மரணத்தால் நிலை குலைந்து போன சிராஜுக்கு விராட் கோலி, ரவி சாஸ்திரி ஆகியோர் ஆறுதல் கூறினர்.
குவாரன்டைன் விதிகள்
முகமது சிராஜ் தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவில்லை. ஆஸ்திரேலியாவில் தற்போது இந்திய அணி குவாரன்டைனில் உள்ளது. அதனால், முகமது சிராஜ் இந்தியா செல்வதில் சிக்கல் இருப்பதாக முதலில் கூறப்பட்டது. ஆனால், பிசிசிஐ தற்போது விளக்கம் அளித்துள்ளது.
பிசிசிஐ அறிக்கை
பிசிசிஐ, சிராஜுடன் அவரை இந்தியா அனுப்புவது பற்றி பேசியதாகவும், இந்த நேரத்தில் அவர் தன் குடும்பத்தினருடன் இருக்க வேண்டும் என்பதால் அவரை இந்தியா அனுப்ப வாய்ப்பளித்ததாகவும், அவர் இந்திய அணியுடன் இருக்க முடிவு செய்ததாகவும் கூறி உள்ளது.
தொந்தரவு செய்ய வேண்டாம்
அவரது இழப்பிற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிசிசிஐ, ஊடகங்கள் முகமது சிராஜ் மற்றும் அவரது குடும்பத்தினரை இந்த நேரத்தில் தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது. அவரது தந்தையின் கனவை நிறைவேற்ற அவர் ஆஸ்திரேலியாவிலேயே தங்கி விட்டார்.
தந்தையின் கனவு
தன் தந்தை எப்போதும் சிராஜ் தேசிய அணியில் நாட்டுக்காக ஆடவேண்டும் என சிராஜ் முன்பு பேட்டிகளில் கூறி உள்ளார். நீண்ட காலம் கழித்து இந்திய அணியில், அதுவும் டெஸ்ட் அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் தன் தந்தையின் கனவை நிறைவேற்ற அவர் முடிவு செய்துள்ளார்.