விஜய் - ராகுல் ரன் குவிக்கவில்லை
முரளி விஜய் கடந்த 15 டெஸ்ட் இன்னிங்க்ஸ்களில் 282 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ராகுல் 22 இன்னிங்க்ஸ்களில் 468 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். டெஸ்ட் தவிர்த்து ராகுல் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் இந்தியாவிற்காக ஆடினார். அதிலும், நிலையாக ரன் குவிக்க முடியாமல் திணறி வருகிறார்.
வாய்ப்பு கிடைத்தது
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ப்ரித்வி ஷா துவக்க வீரராக களம் இறங்குவதாக திட்டம் இருந்தது. அவருடன் முரளி விஜய் அல்லது ராகுல் யாரேனும் ஒருவர் ஆட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், ப்ரித்வி ஷா காயத்தால் இருவருமே களமிறங்க வாய்ப்பு பெற்றனர்.
72 ரன்கள் மட்டுமே
கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தாத இருவரும், நான்கு இன்னிங்க்ஸ்களில் கூட்டணியாக 72 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளனர். இதனால், தங்கள் வாய்ப்பை இழந்துள்ளனர். இதனால், ப்ரித்வி ஷா, மாயங்க் அகர்வால் உள்ளிட்ட வீரர்களுக்கு எளிதாக வழி கிடைத்துள்ளது.
ப்ரித்வி ஷா - மாயங்க் அகர்வால்
ப்ரித்வி ஷா காயத்தில் இருந்து மீளும் பட்சத்தில் அணியில் நிச்சயம் இடம் பிடித்து விடுவார். மாயங்க் அகர்வால் துவக்க வீரராக அறிமுகமாக உள்ளார். இவர் அடுத்து ஆடும் போட்டிகளில் தன்னை நிரூபித்து விட்டால் இவரது இடமும் உறுதியாகி விடும். தற்காலிகமாக ஹனுமா விஹாரி துவக்க வீரராக ஆடவுள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
முரளி விஜய் அவ்வளவு தான்
முரளி விஜய் இங்கிலாந்தில் வாய்ப்பை இழந்து மீண்டும் போராடி ஆஸ்திரேலிய தொடரில் இடம் பிடித்தார். எனினும், மீண்டும் சொதப்பி உள்ளார். உள்ளூர் போட்டிகளில் ரன் குவித்தாலும், சர்வதேச போட்டியில் ரன் குவிக்க முடியாமல் ராசியில்லாத வீரராக மாறி விட்டார் முரளி விஜய். அதனால், முரளி விஜய் மீண்டும் உள்ளூர் போட்டிகளில் நன்றாக ரன் குவித்தாலும் இந்திய அணியில் இடம் கிடைப்பது மிக மிகக் கடினம்.
அதிர்ச்சி அளிக்கும் ராகுல்
ராகுல் உண்மையில் டெஸ்ட் மட்டுமல்லாது, டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் அணியில் இருந்தும் நீக்கப்பட வேண்டும். ஆனால், அவர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான அணியில் இடம் பிடித்து அதிர்ச்சி அளித்துள்ளார்.
செல்லப் பிள்ளை ராகுல்
கோலி - ரவி சாஸ்திரி அல்லது பிசிசிஐ-யின் செல்லப் பிள்ளையாக இருந்து வரும் ராகுல் உள்ளூர் போட்டிகளில் ஆடி தன்னை நிரூபிக்காமல் மீண்டும் டெஸ்ட் அணியில் இடம் பெற்றாலும் அதில் ஆச்சரியமில்லை.