பண்டியா சர்ச்சை பேச்சு
கரன் ஜோகர் நிகழ்ச்சியில் பண்டியா பெண்கள் குறித்து மோசமான வகையில் பேசினார். ராகுல் தான் போட்டிக்கு முந்தைய நாள் முழுவதும் பார்ட்டியில் இருந்ததாகவும் கூறினார். இது போன்ற பேச்சுக்களால் ரசிகர்கள் மத்தியில் இவர்கள் இருவருக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
விசாரணை மற்றும் இடைநீக்கம்
பிசிசிஐ விசாரணையில் இவர்களுக்கு 2 போட்டிகள் தடை விதிக்க வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், அதற்கு பிசிசிஐ சட்ட விதிகளில் இடம் இல்லை என்பதால், அவர்கள் மீது முழு விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த விசாரணை முடியும் வரை அவர்கள் இடை நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா வருவார்களா?
இதனால், ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் அவர்கள் இருவரும் பங்கேற்க வாய்ப்பில்லை என கூறப்பட்டுள்ளது. எனினும், அவர்கள் இந்தியா செல்வார்களா அல்லது ஆஸ்திரேலியாவிலேயே இருப்பார்களா என தெரியவில்லை.
தடை நீங்குமா?
இந்தியா ஆஸி. ஒருநாள் தொடருக்கு அடுத்து நியூசிலாந்து அணியுடன் ஒருநாள் தொடரில் ஆட உள்ளது. அந்த தொடரிலாவது இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா? அதற்குள் இந்த தடை நீங்குமா? என்பது தெரியவில்லை.
பெரும் பின்னடைவு
ஒருநாள் தொடரில் பண்டியா ஆட வாய்ப்பு இருந்தும், தேவையற்ற சர்ச்சையில் சிக்கி அந்த வாய்ப்பை இழந்துள்ளார். ராகுல் ஏற்கனவே, பார்ம் இழந்து தவித்து வரும் நிலையில், இந்த இடை நீக்கத்தால் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார். இனி அவருக்கு அணியில் தொடர்ந்து இடம் கிடைக்குமா என்பது கேள்விக் குறியாகி உள்ளது.
கேப்டன் கோலி என்ன சொன்னார்?
கேப்டன் கோலி, இவர்கள் விவகாரம் எந்த வகையிலும் அணியை பாதிக்காது என கூறியுள்ளார். பண்டியா இல்லாதது கூட பிரச்சனையில்லை. ஜடேஜா அவருக்கு சரியான மாற்றாக அமைவார் என கூறினார். உலகக்கோப்பைக்கு இந்தியா தயாராகி வரும் வேளையில் பண்டியா, ராகுல் அணியில் தங்கள் முக்கியத்துவத்தை இழந்துள்ளனர் என்பதே உண்மை.