கோலி முடிவு
அவரை டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூட அணியில் இருந்து ஒதுக்கி விட்டார். ஆனால், இந்திய அணி கேப்டன் விராட் கோலி அவரை கடினமான ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பங்கேற்க வைக்க முடிவு செய்துள்ளார்.
இந்திய டெஸ்ட் அணி
ஆஸ்திரேலியாவில் இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த தொடருக்கான 18 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் மோசமாக ஆடி வரும் ப்ரித்வி ஷா பெயரும் இடம் பெற்று இருந்தது.
ரோஹித் சர்மா இல்லை
தற்போது காயத்தில் சிக்கி இருக்கும் ரோஹித் சர்மா பெயர் டெஸ்ட் அணியில் இடம் பெறவில்லை. ரோஹித் சர்மா அடுத்த வாரம் முதல் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பார் என கூறப்படும் நிலையில் அவர் பெயர் டிசம்பரில் நடக்க உள்ள டெஸ்ட் தொடரில் இடம் பெறவில்லை.
துவக்க வீரர்கள் யார்?
அவருக்கு பதில் துவக்க வீரர்களாக மயங்க் அகர்வாலுடன் கேஎல் ராகுல், பிரித்வி ஷா அல்லது ஷுப்மன் கில் இடம் பெறலாம். அவர்கள் மூவருமே டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ளனர். ஷுப்மன் கில், கேஎல் ராகுல் நல்ல பார்மில் உள்ளனர்.
ப்ரித்வி ஷாவுக்கு ஏன் வாய்ப்பு?
அவர்கள் இருவரும் இருக்கும் போது எதற்கு கூடுதலாக ப்ரித்வி ஷாவுக்கும் டெஸ்ட் அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் ஐபிஎல் தொடரில் முதலில் சிறப்பாக ஆடினார். ஆனால், சில போட்டிகள் சென்ற பின் அவரது பலவீனத்தை எதிரணிகள் குறி வைத்தன.
ஐபிஎல் செயல்பாடு
அவர் கால்களை நகர்த்தி ஆடுவதில்லை. குறிப்பாக ஸ்விங் ஆகும் பந்துகளை அவர் பேக்புட்டில் கால்களை நகர்த்தாமல் ஆடுகிறார். அதனால், ஆட்டமிழந்து வருகிறார். கடைசியாக ஆடிய போட்டிகளில் டக் அவுட் ஆகியும், ஒற்றை இலக்கத்திலும் ஆட்டமிழந்து வந்தார்.
பாண்டிங் நீக்கினார்
ரிக்கி பாண்டிங் அத்தனை எளிதில் பேட்ஸ்மேன்களை நீக்க மாட்டார். இளம் வீரர்களுக்கு தொடர்ந்து அணியில் வாய்ப்பு அளிப்பார். சில போட்டிகளில் தடுமாறினாலும் அவர்களை ஆதரிப்பார். அவரே ப்ரித்வி ஷா மீது பொறுமை இழந்து அவரை அணியில் இருந்து நீக்கி இருக்கிறார்.
விமர்சகர்கள் கேள்வி
ஆனால், ப்ரித்வி ஷாவுக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் அச்சுறுத்தும் வகையில் ஆஸ்திரேலிய மண்ணில் பந்து வீசுவார்கள். அங்கே டெக்னிக்கில் தவறு செய்யும் ப்ரித்வி ஷா எப்படி சமாளிக்கப் போகிறார்? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கேலிக்கூத்து
ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பில் ரோஹித் சர்மாவை நீக்கியதே பெரும் கேலிக் கூத்தாக உள்ளது. இந்த நிலையில் ப்ரித்வி ஷாவை சேர்த்தது இன்னும் வேடிக்கையாக இருக்கிறது. இந்த விஷயத்தில் விராட் கோலி மற்றும் பிசிசிஐ மீது தொடர்ந்து விமர்சனம் எழுந்து வருகிறது.