கோலி மீது எதிர்பார்ப்பு
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு செல்லும் முன் சாமானிய ரசிகர்களுக்கு வழக்கம் போல இந்திய அணியில் கோலி மீது மட்டுமே எதிர்பார்ப்பு இருந்தது. சில முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே புஜாரா ஆஸ்திரேலிய மண்ணில் சாதிப்பார் என கணித்தனர்.
கோலியை விட அதிக ரன்கள்
தற்போது டெஸ்ட் தொடர் நடந்து முடிந்துள்ள நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளையும் சேர்த்து அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் கோலி மூன்றாம் இடம் மட்டுமே பிடிக்க முடிந்தது. புஜாரா கோலியை விட கிட்டத்தட்ட இரு மடங்கு ரன் குவித்து இருந்தார்.
டெஸ்ட் போட்டிகளின் புதிய முகம்
மூன்று சதங்கள், 521 ரன்கள், சராசரி 74 என இந்த டெஸ்ட் தொடரில் அசத்திய புஜாரா டெஸ்ட் போட்டிகளின் புதிய முகமாகவே மாறி விட்டார். இந்த தொடரில் அவரது ரன் குவிப்பால் தொடர் நாயகன் விருதையும் வென்றார்.
நான்கு முன்னணி இந்திய வீரர்கள்
இது வரை ஆஸ்திரேலிய மண்ணில் நான்கு முன்னணி இந்திய வீரர்கள் மட்டுமே தொடர் நாயகன் விருதை வென்றுள்ளனர். அவர்களோடு ஐந்தாவதாக இணைந்துள்ளார் புஜாரா. 1985-86 ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், கபில் தேவ் இணைந்து தொடர் நாயகன் விருதை வென்றனர்.
ஐந்தாவதாக தொடர் நாயகன்
அடுத்து சச்சின் 1999-00 டெஸ்ட் தொடரிலும், ராகுல் டிராவிட் 2003-04 டெஸ்ட் தொடரிலும் தொடர் நாயகன் விருதை வென்றனர். இந்த நால்வருக்கும் அடுத்து புஜாரா ஐந்தாவதாக தொடர் நாயகன் விருதை வென்று சாதித்துள்ளார்.
இனிமே பார்க்க முடியாது
இத்தனை சாதனை செய்து இருந்தாலும் புஜாராவை அடுத்த ஏழு - எட்டு மாதங்களுக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் காண முடியாது. ஜூலை மாதம் முடியும் உலகக்கோப்பை வரை இந்தியா அடுத்து எந்த டெஸ்ட் போட்டிகளிலும் ஆடப் போவதில்லை.
ரஞ்சி, கவுன்டி மட்டுமே
புஜாராவை ஐபிஎல் அணிகளும் ஏலத்தில் எடுக்காத நிலையில், அவர் அடுத்த டெஸ்ட் தொடர் வரும் வரை உள்ளூர் கிரிக்கெட்டான ரஞ்சி தொடர் மற்றும் கவுன்டி கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே ஆட உள்ளதாக தெரிவித்துள்ளார்.