தோல்விக்கு காரணம் என்ன?
முதல் போட்டியின் தோல்விக்கான காரணம் என்ன? முதலில் அணித் தேர்வில் இந்தியா கோட்டை விட்டது. இதற்கு முக்கிய காரணம், இந்தியா உலகக்கோப்பைக்கு வீரர்களை பரிசோதித்து பார்க்க விரும்பியது தான்.
தொடர் பரிசோதனைகள்
ஜனவரி மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலியா தொடர் மற்றும் அதன் பின் தொடங்கிய நியூசிலாந்து தொடர் என இரண்டிலும் இந்தியா பல்வேறு பரிசோதனைகளை செய்து பார்த்தது. அதிலும் திருப்தி அடையாமல் மீண்டும் புதிய வீரர்களை அணியில் சேர்த்து பரிசோதனையை தொடர்ந்து வருகிறது.
முழு பலம் கொண்ட அணியா?
உலகக்கோப்பைக்கு முன் இந்தியா ஆடவுள்ள கடைசி தொடர் இது என்றால், இந்தியா முழு பலம் கொண்ட அணியுடன் களம் இறங்கி தொடர் வெற்றிகளை பெற்று நம்பிக்கையுடன் உலகக்கோப்பைக்கு தயாராகி இருக்கலாமே? ஆனால், இந்தியா அதை செய்யவில்லை. இது தான் தோல்விக்கு முதல் காரணம்.
அதிரடி ஷாட் தேவையா?
அடுத்து இந்த போட்டி நடந்த விசாகப்பட்டினம் மைதானம் அதிரடி ஷாட்கள் அடித்து ஆட ஏற்றதாக இல்லை. எனினும், இந்திய பேட்ஸ்மேன்கள் பலர் ஷாட் அடிக்க ஆசைப்பட்டு தங்கள் விக்கெட்டை இழந்தனர். ராகுல் மட்டுமே தேர்வு செய்த ஷாட்கள் ஆடி அரைசதம் அடித்தார்.
பவுண்டரி அடிக்காத தோனி
நிதானமாக ஆடிய தோனி, விக்கெட்கள் வீழ்ச்சியால் ஒரு கட்டத்தில் தானே ஸ்ட்ரைக் வைத்துக் கொள்ள முடிவு செய்து ஒற்றை ரன்களை ஓட வாய்ப்பு இருந்தும் ஓடவில்லை. ஆனால், அவரால் ஸ்ட்ரைக் வைத்துக் கொண்டு பவுண்டரி அடிக்கவும் முடியவில்லை. மொத்தமாக தோனி கடைசி ஓவரில் ஒரு சிக்ஸ் மட்டுமே அடித்தார்.
தோனி ஆறுதல்
கடைசி மூன்று ஓவர்களில் தோனி செய்த சொதப்பலால் இந்தியா குறைந்தது எட்டு ரன்களாவது இழந்தது. எனினும், தோனியும் மற்ற வீரர்கள் போல ஆட்டமிழந்து செல்லாமல் நின்று ஆடியது மட்டுமே இதில் ஆறுதல்.
இந்தியா தாமதம்
127 ரன்கள் என்ற இலக்கை ஆஸ்திரேலியா எட்ட மிகவும் கடினமாக போராடியது. அதற்கு காரணம், இந்திய பேட்டிங்கை ஆட்டம் காண வைத்த அதே நிதானமான பிட்ச் தான். இதை இந்தியா 14வது ஓவர் முதல் பயன்படுத்திக் கொண்டு விக்கெட் எடுத்தது. இது மிகவும் தாமதம்.
மோசமான பந்துவீச்சு
ஆனால், முதல் பாதி பந்துவீச்சில் இந்தியாவால் ஆதிக்கம் செலுத்த முடியாமல் போனதற்கு முக்கிய காரணம் உமேஷ் யாதவ் மற்றும் மாயங்க் மார்கண்டேவின் மோசமான பந்துவீச்சு. இருவரும் ரன்களை வாரி இறைத்தனர்.
கடைசி ஓவர் நிலை
இறுதியாக அந்த கடைசி ஓவர். இந்தியா கடைசி ஓவர் வரை போட்டியை எடுத்து வந்தது. ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழந்து களத்தில் முழு நேர பேட்ஸ்மேன்கள் இல்லாமல் இருந்தது. கடைசி ஓவரில் 14 ரன்கள் எடுத்தால் ஆஸ்திரேலியா வெற்றி பெறலாம் என்ற நிலை.
உமேஷ் யாதவ் சொதப்பல்
உமேஷ் யாதவ் பந்து வீசினார். இந்த நேரத்தில் தோனி தான் பீல்டிங் வியூகம் அமைத்தார். பீல்டிங்கில் சிறிய சொதப்பல் இருந்தது உண்மையே. ஆனால், உமேஷ் யாதவ் யார்க்கர் வீச முயற்சி செய்து ஃபுல் லென்த் பந்துகளையும், ஃபுல் டாஸ் பந்துகளையுமே வீசினார். ஆஸ்திரேலிய வீரர்கள் கம்மின்ஸ் மற்றும் ரிச்சர்ட்சன் இருவரும் ஆளுக்கு ஒரு பவுண்டரி அடித்தும், ரன்கள் ஓடியும் அணியை வெற்றி பெறச் செய்தனர்.