உலகக்கோப்பை
உலகக்கோப்பை தொடர் வரும் மே மாதம் துவங்க உள்ள நிலையில் இந்தியா தன் கடைசி சர்வதேச கிரிக்கெட் தொடரில், பலவீனமான அணியிடம் தோல்வி அடைந்து உள்ளது. இதற்கு என்ன காரணம்? உலகக்கோப்பை தான் காரணம்!!
சிறந்த அணி தேர்வு!!
ஆம், உலகக்கோப்பைக்கு மிகச் சிறந்த அணியை தயார் செய்கிறோம் என்ற பெயரில் இந்திய கிரிக்கெட்டில் ஒரு கூத்து நடந்து வருகிறது. அந்த கூத்தை உலகக்கோப்பைக்கு முன் நடக்கவுள்ள கடைசி சர்வதேச போட்டி வரை தொடர்ந்துள்ளது கோலி, ரவி சாஸ்திரி கூட்டணி.
குழப்பம்
இந்திய அணிக்கு 11 வீரர்கள் தான் தேவை. கூடுதலாக 4-5 மாற்று வீரர்கள் தேவை. இப்படி தான் எல்லா அணியும் தயாராகி வருகின்றன. ஆனால், இந்திய அணி சுமார் 20+ வீரர்களை வைத்துக் கொண்டு கடந்த 4-5 மாதங்களாக குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது. ஆஸ்திரேலிய தொடரிலும் இதே குழப்பம் நீடித்தது.
சுழற்சி முறை
இந்தியா 15 வீரர்களை சுழற்சி முறையில் பயன்படுத்தியது, புதிய வீரர்களுக்கு வாய்ப்பு, சில பரிசோதனை முயற்சிகள், அணியின் சம பலம் என பல முயற்சிகளை செய்யும் களமாக ஆஸ்திரேலிய தொடரை பயன்படுத்தினார்கள்.
தினேஷ் கார்த்திக் எங்கே?
தினேஷ் கார்த்திக் அணியில் இல்லை. அவருக்கு மாற்றாக ரிஷப் பண்ட் என்றார்கள். அவர் விக்கெட் கீப்பிங்கில் அதிக அனுபவமற்றவர். அவரை ஏன் தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பராக தேர்வு செய்தார்கள்?அவர் அதிரடி பேட்ஸ்மேன் என்கிறார்கள். கடைசியாக ஆடிய 10 போட்டிகளில் எத்தனை போட்டிகளில் அவர் ரன் குவித்தார்? இதற்கு பதில் இல்லை. இவரை விட தினேஷ் எந்த வகையில் குறைந்தவர்?
தோனிக்கு ஓய்வு
முதல் மூன்று போட்டிகளில் ஆடிய தோனிக்கு கடைசி இரு போட்டிகளில் ஓய்வு கொடுத்தார்கள். அதற்கு காரணம், ரிஷப் பண்ட்டுக்கு விக்கெட் கீப்பிங் செய்ய வாய்ப்பு வழங்கிப் பார்க்க வேண்டும் என்பதே! ஆனால், அது தான் நான்காவது போட்டியில் இந்திய அணியில் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள்
பந்து வீச்சிலும் சிறந்த மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் என பும்ரா, புவனேஸ்வர் குமார், ஷமி ஆகியோரைக் குறிப்பிடும் கோலி - ரவி சாஸ்திரி, அவர்கள் மூவரையும் முதல் நான்கு போட்டிகளில் பிரித்து வைத்தது. கடைசி போட்டியில் மட்டும் தான் அவர்கள் மூவரும் பங்கேற்றார்கள். அதுவும் பெரிய அளவில் வேலை செய்யவில்லை. அப்புறம் ஏன் இவர்களுக்கு பயங்கர பில்டப்?
மிடில் ஆர்டர் குழப்பம்
விஜய் ஷங்கர், ரிஷப் பண்ட், தோனி, ராகுல் ஆகியோர் பேட்டிங் செய்யும் இடங்கள் இந்த தொடரில் மாற்றப்பட்டது. இதில் விஜய் சங்கர், ரிஷப் பண்ட் எந்த இடத்திற்கு பேட்டிங் செய்ய வைக்கலாம் என்பது கடைசி வரை குழப்பமாகவே இருந்து வந்தது.
அம்பதி ராயுடு - தவான்
அம்பதி ராயுடு மூன்று போட்டிகளில் சொதப்பியதால், அடுத்த 2 போட்டிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. ஆனால், அதே முதல் மூன்று போட்டிகளில் சரியாக ஆடாத தவான் நான்காவது போட்டியில் பங்கேற்று சதம் அடித்தார்.
உலகக்கோப்பை வெல்லும்?!
இப்படி, கோலி - ரவி சாஸ்திரி குழுவினர் செய்த கந்தரகோலம் ஏராளம். இவர்கள் இருவர் தலைமையில் இந்தியா உலகக்கோப்பை வெல்லும் என்ற கனவை மறந்து விடுவதே நல்லது!