முதிர்ச்சி இல்லை
இந்திய அணியில் சுமாராக ஆடினாலும் தொடர்ந்து அதிக வாய்ப்பு பெற்ற வீரர் சமீபத்தில் ரிஷப் பண்ட் தான். அமுல்பேபி என சிலரால் அழைக்கப்பட்டு அணியில் வலம் வந்தார் பண்ட். அது தான் அவரது பிரச்சனையும் கூட. அவரது ஆட்டத்தில் முதிர்ச்சி இன்றி முதல் இரண்டு ஆண்டுகள் சிரமப்பட்டார்.
அந்த இரண்டு சதங்கள்
டெஸ்ட் போட்டிகளில் அவர் அடித்த இரண்டு சதங்கள் மட்டுமே அவரை இரண்டு ஆண்டுகளுக்கு இந்திய அணியில் தொடர்ந்து தக்க வைத்தது. இங்கிலாந்து ,மண்ணிலும், ஆஸ்திரேலிய மண்ணிலும் டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்த ஒரே இந்திய விக்கெட் கீப்பர் என்ற அடையாளம் அவரை காப்பாற்றி வந்தது.
விமர்சனம்
தோனிக்கு மாற்று வீரர் என பில்டப் கொடுக்கப்பட்ட அவர் ஒருநாள் மற்றும் டி20 அணியிலும் இடம் பெற்றார். ஆனால், முதிர்ச்சி இன்றி அடித்து ஆடி கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வந்தார். அதனால், அவர் மீது விமர்சனம் எழுந்தது. தோனியுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் அவரை கிண்டல் செய்தனர்.
தோனி போல ஆட முயற்சி
இளம் வீரரான அவர் இந்த அழுத்தத்தை தாங்க முடியாமல் தன் உண்மையான திறமைகளை மறந்து தோனி போல விக்கெட் கீப்பிங் செய்ய, பேட்டிங் செய்ய முயன்றார். அதுவும் பலன் அளிக்கவில்லை. இதனிடையே, ஒருநாள் மற்றும் டி20 அணியில் அவரது இடத்தை பிடித்தார் கேஎல் ராகுல்.
உடல் எடை
எனினும், மூன்று அணிகளிலும் மாற்று விக்கெட் கீப்பராக இடம் பெற்று வந்தார் ரிஷப் பண்ட். இந்த நிலையில், ஆஸ்திரேலிய தொடரில் ஒருநாள் மற்றும் டி20 அணியில் அவர் நீக்கப்பட்டார். அவரது உடல் எடை அதிகமாக இருப்பதாக ஒரு புகாரை கூறி அதிர வைத்தது தேர்வுக் குழு.
முதன்மை விக்கெட் கீப்பர்
டெஸ்ட் அணியில் மட்டுமே இடம் பெற்று இருந்தார் பண்ட். டெஸ்ட் அணியின் முதன்மை விக்கெட் கீப்பர் விரிதிமான் சாஹா தான். ஆனாலும், வெளிநாடுகளில் பண்ட் சதம் அடித்து இருப்பதால் அவருக்கு போட்டிகளில் ஆட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
வெளிநாட்டில் பண்ட்
கடந்த நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் அதுதான் நடந்தது. சாஹாவை ஓரங்கட்டி விட்டு பண்ட்டை ஆட வைத்தார் கேப்டன் கோலி. அதே போல, ஆஸ்திரேலிய தொடரிலும் அவருக்கு ஒரீரு போட்டிகளிலவாது ஆட வாய்ப்பு கிடைக்கும் என நினைத்த நிலையில், சாஹா அதற்கு முடிவு கட்டி உள்ளார்.
சாஹாவுக்கு ஐபிஎல் வாய்ப்பு
ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வென்றே ஆக வேண்டும் என்ற நிலையில் ஹைதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவை நீக்கிவிட்டு விரிதிமான் சாஹாவை துவக்க வீரராக ஆட வைத்தார்.
யாருமே எதிர்பார்க்கவில்லை
அந்தப் போட்டியில் அவர் 45 பந்துகளில் 87 ரன்கள் குவித்தார். இப்படி ஒரு அதிரடி ஆட்டம் ஆடுவார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. ஹைதராபாத் அணி இந்தப் போட்டியில் 88 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது. ரிஷப் பண்ட் இந்த சீசனில் பேட்டிங்கில் சராசரியாகவே ஆடி வருகிறார்.
பண்ட்டுக்கு முடிவு
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரில் நல்ல பார்மில் இருக்கும் சாஹாவுக்கு களமிறங்க வாய்ப்பு கிடைக்கும். மேலும், ரிஷப் பண்ட்டை விட விக்கெட் கீப்பிங்கில் சிறந்து விளங்குகிறார் சாஹா. முதலில் தோனியால் ஒருநாள் மற்றும் டி20யில் வாய்ப்பை இழந்த பண்ட், தற்போது மற்றொரு மூத்த விக்கெட் கீப்பர் சாஹாவிடம் டெஸ்ட் அணி இடத்தையும் இழக்கப் போகிறார்.