குறைந்த போட்டிகள்
ரிஷப் பண்ட் டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பிங்கில் முன்னேறி வருகிறார். ஆனால், சர்வதேச டி20 - ஒருநாள் தொடர்களில் மிகக் குறைந்த போட்டிகளிலேயே ரிஷப் பண்ட் கீப்பிங் செய்துள்ளார்.
வாய்ப்பை தவறவிட்டார்
அவரது அனுபவமின்மை காரணமாக மொஹாலி ஒருநாள் போட்டியில் மூன்று முறை விக்கெட் எடுக்கும் வாய்ப்பை தவறவிட்டார். புதிய வீரர் என்பதால் அழுத்தமான நேரங்களில் பதற்றம் ஏற்படுகிறது. இது இயல்பு தான்.
வாய்ப்பு கொடுக்கும் களமா?
ரசிகர்கள் ரிஷப் பண்ட்டை விமர்சிக்கும் போது பலர் இவர் இளம் வீரர். விரைவில் கற்றுக் கொள்வார். வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால், உலகக்கோப்பை இவருக்கு வாய்ப்பு கொடுக்கும் களம் அல்ல.
அழுத்தம்
உலகக்கோப்பையில் ஒவ்வொரு போட்டியிலும் அழுத்தம் இருக்கும். தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பராகத் தான் ரிஷப் பண்ட் இருக்கப் போகிறார். எனவே, அனைத்து போட்டிகளிலும் அவர் கீப்பர் பணி செய்ய மாட்டார்.
பொறுப்பாக இருப்பாரா?
ஆனால், உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்திய தகுதி பெற்று, அந்த போட்டியில் தோனியால் ஆட முடியாத நிலை ஏற்பட்டால், ரிஷப் பண்ட் அந்த போட்டியில் பொறுப்பாக, நுட்பத்துடன் கீப்பிங் செய்வார் என கூற முடியுமா?
தினேஷ் அனுபவம்
இந்த இடத்தில் தான் தினேஷ் கார்த்திக் முக்கியத்துவம் பெறுகிறார். தினேஷ் கார்த்திக் சர்வதேச போட்டிகள் அனுபவம் ஓரளவு உள்ளது. 20 ஆண்டுகளாக கிரிக்கெட் ஆடி வருகிறார். உடற் தகுதியுடன் இருக்கிறார். அதைவிட களத்தில் பொறுப்பான வீரர் என்பதை பல முறை நிரூபித்துள்ளார். விக்கெட் கீப்பிங்கில் தோனி அளவுக்கு தினேஷ் இல்லை என்பது உண்மை. ஆனால், அதிக தவறுகள் செய்ததில்லை
மாற்று விக்கெட் கீப்பர்
தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பர் என்ற இடத்திற்கு தான் இருவரும் போட்டியிடுகிறார்கள். அந்த பந்தயத்தில் தினேஷ் கார்த்திக் தான் முன்னிலையில் இருக்கிறார். சரி, பேட்டிங்கில் இருவரும் எப்படி?
4வது போட்டி
மீண்டும் நாம் அழுத்தமான சூழ்நிலையில் யார் பொறுப்பாக ஆடுவார்கள் என்பதை தான் பார்க்க வேண்டும். ரிஷப் பண்ட் ஆஸ்திரேலிய தொடரின் 4வது போட்டியில் 36 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ரோஹித் - தவான் பெரிய அளவில் ரன் குவித்த பின்னர் ரிஷப் பண்ட் களமிறங்கி அதிரடியாக 36 ரன்கள் குவித்தார். அவருக்கு எந்த அழுத்தமும் இல்லை.
அனுபவமின்மை
அதே ஐந்தாவது போட்டியில் இந்தியா துவக்கத்திலேயே முக்கிய விக்கெட்களை இழந்த நிலையில், ரிஷப் பண்ட் பொறுப்பாக ஆடி இருக்க வேண்டும். ஆனால், 16 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். காரணம், இளம் வீரர், அனுபவமின்மை ஆகியவை தான்.
பொறுப்பான பேட்ஸ்மேன்
தினேஷ் கார்த்திக் அழுத்தமான பல நேரங்களில் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார். சில முறை வெற்றிக்கு அருகே அழைத்துச் சென்றுள்ளார். சில முறை சொதப்பியும் இருக்கிறார். ஆனால், ரிஷப் பண்ட்டுடன் ஒப்பிட்டால், தினேஷ் பொறுப்பான பேட்ஸ்மேன் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
அனுபவம்
உலகக்கோப்பை போன்ற பரபரப்பான தொடரில் இந்தியா அனுபவ வீரர்களை தான் எடுத்துச் செல்ல வேண்டும். தற்போதைய இந்திய அணியில் ரோஹித், தவான், கோலி, தோனி, புவனேஸ்வர் குமார் ஆகிய வீரர்கள் மட்டுமே அதிக வருடங்கள் சர்வதேச போட்டியில் ஆடிய அனுபவம் பெற்றவர்கள். அனுபவ அடிப்படையில் தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவாரா? அல்லது இளம் அதிரடி வீரர் என ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்படுவாரா?