ரோஹித் சர்மா காயம்
ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரில் ஆடி வந்த நிலையில், அவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் கடைசி இரு போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை. அவர் நிலை என்ன என்பது தெளிவாக தெரியவில்லை. இடது காலில் தசைப்பிடிப்பு என்பது மட்டுமே தெரிய வந்துள்ளது.
வலி அதிகம்
தசைப்பிடிப்பு பொதுவாக ஒரீரு நாட்களில் குணமடையும். ஆனால், ரோஹித் சர்மாவுக்கு வேறு ஏதேனும் பாதிப்பு இருக்கலாம் என கூறப்படுகிறது. அவருக்கு வலி அதிகம் இருப்பதால் பிசிசிஐ மருத்துவர்கள் கண்காணிப்பில் அவர் இருக்கிறார்.
ரசிகர்கள் கொந்தளிப்பு
அவர் விரைவில் ஐபிஎல் தொடரிலேயே அடுத்து வரும் போட்டிகளில் பங்கேற்பார் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், இந்திய அணியில் அவரை நீக்கி அதிர வைத்துள்ளது பிசிசிஐ. அவருக்கு காயம் என்பதால் ஒரேடியாக புறக்கணிக்கப்படுகிறாரா? என கேள்வி எழுப்பி உள்ளனர் ரசிகர்கள்.
மூன்று தொடர்கள்
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன ஒருநாள் தொடர் வரும் நவம்பர் 27 அன்று துவங்க உள்ளது. அதைத் தொடர்ந்து டி20 தொடர் மற்றும் டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. இந்த மூன்று தொடர்களிலும் முக்கிய வீரரான ரோஹித் சர்மா இடம் பெற்று இருக்க வேண்டும்.
சேர்த்து இருக்க வேண்டும்
அவருக்கு காயம் என்றாலும் அவர் பெயரை சேர்த்து விட்டு, பின் காயம் காரணமாக அந்தந்த போட்டிகள் அல்லது தொடர்களில் இருந்து மட்டும் அவரை நீக்கி இருக்கலாம். ஆனால், அவர் பெயரை உத்தேச அணியில் கூட பிசிசிஐ சேர்க்கவில்லை.
சிக்கல்
தற்போது அவர் இந்திய அணியுடன் ஆஸ்திரேலியா பயணம் செய்ய முடியாது. அப்படி என்றால் அவர் காயம் குணமான பின் குவாரன்டைன் விதிகளை பின்பற்றி அணியுடன் இணைய வேண்டும். இது சிக்கலானது. அவர் முதல் போட்டிக்கு முன்னதாக மீண்டாலும் கூட இந்த விதிகள் காரணமாக அந்த தொடரில் ஆட முடியாமல் போகலாம்.
ஏன் இந்த முடிவு?
ரோஹித் சர்மா சிகிச்சைக்காக பிசிசிஐ இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என்றும் சிலர் கூறுகிறார்கள். தற்போது அவர் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இருக்கிறார். அவர் பிசிசிஐ மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தான் காரணமா?
அவருக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்டால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். அந்த நிலையில் அவர் கொரோனா வைரஸ் தற்காப்பு பாதுகாப்பு வளையத்தில் இருக்க முடியாது. அதன் காரணமாக பிசிசிஐ அவரை தற்காலிகமாக அணியில் சேர்க்காமல் இருக்கக் கூடும்.
புறக்கணிப்பு
ஆனால், அவர் காயம் குணமான பின் அணியில் சேர்க்கப்படுவாரா? என்பதே ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. பல ஆண்டு காலம் டெஸ்ட் அணியில் ரோஹித் சர்மா புறக்கணிக்கப்பட்டது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அதே போல மீண்டும் நடக்கிறதா? என்பதே ரசிகர்கள் கோபத்துக்கு காரணம்.
துணை கேப்டன்
ரோஹித் சர்மாவின் துணை கேப்டன் பதவியை பிடித்திருப்பது யார் தெரியுமா? அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக உயர்ந்துள்ள கேஎல் ராகுல் தான். அவர் ஐபிஎல் தொடரில் முதன்முறையாக பஞ்சாப் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.