சர்ச்சை
தான் முதலில் இருந்தே ஆஸ்திரேலிய தொடரில் ஆட தயாராக இருந்ததாகவும், தன் காயம் குறித்து பிசிசிஐ மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தான் எப்போதும் பேசி வந்ததாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த நிலையில், பிசிசிஐ அவரை அணியில் தேர்வு செய்யாமல் விட்டது ஏன் என்ற கேள்வி எழுந்து மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
காயம்
ரோஹித் சர்மா 2020 ஐபிஎல் தொடரின் இடையே காயத்தில் சிக்கினார். அவருக்கு இடது தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. அவர் அதன் பின் ஐபிஎல் போட்டிகளில் ஆடாமால் ஓய்வில் இருந்தார். அந்த இடைவெளியில் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
அணியில் நீக்கம்
அந்த இந்திய அணியில் ரோஹித் சர்மா பெயர் இடம் பெறவில்லை. ஒருநாள் அணி, டி20 அணி, டெஸ்ட் அணி என மூன்று அணிகளிலும் ரோஹித் சர்மா பெயர் இடம் பெறவில்லை. காயம் காரணமாக அவருக்கு அணியில் இடம் அளிக்கப்படவில்லை என கூறியது பிசிசிஐ.
வெடித்த விவாதம்
அது பெரும் விவாதமாக மாறியது. மும்பை இந்தியன்ஸ் அணி விரைவில் ரோஹித் ஐபிஎல் தொடரில் ஆடுவார் என கூறிய நிலையில், ரோஹித் சர்மா வலைப் பயிற்சி செய்த நிலையில், அவரை எப்படி பிசிசிஐ இரண்டு மாதம் நடைபெற உள்ள ஆஸ்திரேலிய தொடரில் இருந்து நீக்கும் என்ற கேள்வி எழுந்தது.
ஐபிஎல் ஆட்டம்
ஐபிஎல் தொடரில் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன் ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் சேர்க்கப்பட்டார். அவர் பிளே-ஆஃப் மற்றும் இறுதிப் போட்டியில் ஆடி மும்பை அணியை கேப்டனாக கோப்பை வெல்ல வைத்தார். அதன் பின் அவரை இந்திய அணியில் சேர்த்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தது பிசிசிஐ.
டெஸ்ட் அணியில் சேர்ப்பு
பின் ரோஹித் சர்மாவின் காயம் முழுமையாக குணமாகாத நிலையில் அவரை டெஸ்ட் அணியில் மட்டும் சேர்த்தது பிசிசிஐ. அவருக்கு 70 சதவீத உடற்தகுதி மட்டுமே உள்ளது என பிசிசிஐ தலைவர் கங்குலி விளக்கம் அளித்தார்.
சிக்கிய பிசிசிஐ
ஆனால், முதலில் அவரை ஏன் டெஸ்ட் அணியிலும் சேர்க்கவில்லை என்ற கேள்வி எழுந்தது. பிசிசிஐ வீரர்களின் காயத்தை சரியாக கையாளவில்லை என்ற விமர்சனம் கடந்த சில ஆண்டுகளாகவே உள்ளது. இந்த நிலையில், ரோஹித் சர்மாவின் காயம் குறித்து அவரிடம் பிசிசிஐ பேசியதா? இல்லையா? என்ற கேள்வி எழுந்தது,
உண்மையை உடைத்த ரோஹித்
இந்த நிலையில், ரோஹித் சர்மா ஒரு பேட்டியில் அந்த உண்மையை போட்டு உடைத்துள்ளார். இந்த விஷயத்தில் என்ன நடக்கிறது என்றே தனக்கு தெரியவில்லை என்றும், ஆனால், தான் எப்போதும் காயம் பற்றி பிசிசிஐ மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் பேசி வந்ததாக கூறி இருக்கிறார்.
சந்தேகமே வேண்டாம்
தன் காயம் குணமாகாத நிலையில் தன்னால் டெஸ்ட் தொடரில் மட்டும் பங்கேற்க முடியும் என பிசிசிஐயிடம் கூறியதாகவும் தெரிவித்தார். தன் உடற்தகுதி குறித்து யாருக்கும் சந்தேகமே வேண்டாம் என்பதால் அதை நிரூபிக்க தேசிய கிரிக்கெட் அகாடமியில் தற்போது பயிற்சி செய்து வருவதாகவும் கூறினார்.
பதில் சொல்லுமா பிசிசிஐ?
மூத்த வீரர் ஒருவருக்கே இந்த நிலையா? என அதிர்ச்சி அடையும் அளவுக்கே பிசிசிஐ இந்த விஷயத்தில் நடந்து கொண்டுள்ளது. ரோஹித் தன் காயம் குறித்து பிசிசிஐயிடம் விளக்கம் அளித்தும், ஐபிஎல் தொடரின் பின் பகுதியில் தான் ஆட உள்ளதை தெரிவித்தும், எந்த காரணத்தால் அவரை முதலில் எந்த அணியிலும் தேர்வு செய்யவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. பிசிசிஐ பதில் சொல்லுமா?