ரோஹித் காயம்
ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரின் போது இடது காலில் காயம் அடைந்தார். அவருக்கு தசைப்பிடிப்பு மோசமாக இருந்ததால் சில போட்டிகளில் ஆடாமல் ஓய்வில் இருந்தார். அவர் ஐபிஎல் தொடர் முடிவதற்குள் மீண்டு விடுவார் என கூறப்பட்டு வந்த நிலையில் அவரை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இருந்து நீக்கியது பிசிசிஐ.
டெஸ்ட் தொடரில் வாய்ப்பு
பின் அவர் ஐபிஎல் தொடரில் போட்டிகளில் ஆடியதை அடுத்து வேறு வழியின்றி அவரை டெஸ்ட் தொடருக்கான அணியில் மட்டும் சேர்த்தது பிசிசிஐ. அவர் 70 சதவீத உடற்தகுதியுடன் இருப்பதாக பிசிசிஐ கூறியது. ரோஹித் சர்மாவும் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் ஓய்வு எடுக்க விரும்பினார்.
ஆஸி. செல்லவில்லை
டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ள அவரை உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும் என காரணம் காட்டி இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது பிசிசிஐ. அங்கே அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியின் ஒப்புதல் பெற்ற பின்னரே ஆஸ்திரேலியா செல்ல முடியும் என்ற நிலை இருந்தது.
தயார் ஆனார்
இந்த நிலையில், ரோஹித் சர்மா கடந்த சில நாட்கள் முன்பு தேசிய கிரிக்கெட் அகாடமியில் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். அவர் ஆஸ்திரேலிய தொடருக்கு தயார் ஆகி விட்டார் என பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியானது.
ரவி சாஸ்திரி பரபரப்பு
இந்த நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இந்தியாவில் உடற்தகுதி தேர்வை நிரூபிக்காமல் இருக்கும் ரோஹித் சர்மா, இஷாந்த் சர்மா இன்னும் நான்கு அல்லது ஐந்து நாட்களில் ஆஸ்திரேலியா வரவில்லை என்றால் டெஸ்ட் தொடரில் ஆட முடியாது என கூறினார்.
தேசிய கிரிக்கெட் அகாடமி
இதை அடுத்து தான் தேசிய கிரிக்கெட் அகாடமி இன்னும் அவர்கள் ஆஸ்திரேலியாவில் போட்டிகளில் பங்கேற்க ஒப்புதல் அளிக்கவில்லை என தெரிய வந்துள்ளது. அவர்கள் இதுபற்றி இந்திய அணி நிர்வாகத்திடம் எதுவும் தெரிவிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. அதனால், ரோஹித் சர்மா நான்கு நாட்களுக்குள் ஆஸ்திரேலியா செல்வது சாத்தியம் இல்லை.
பிசிசிஐ அமைதி
இந்த குழப்பத்தை தீர்த்து வைக்க வேண்டிய பிசிசிஐ இதைப் பற்றி இதுவரை கண்டு கொண்டதாக தெரியவில்லை. ஒரு அணியின் பயிற்சியாளர் தாமாக வந்து இரு வீரர்கள் வரவில்லை என்றால் அணியில் சேர்த்துக் கொள்வது கடினம் என கூறுவதை எப்படி பிசிசிஐ வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இஷாந்த் சர்மாவும் நீக்கம்?
இதில் இஷாந்த் சர்மா ஐபிஎல் தொடரில் பாதியிலேயே காயம் காரணமாக விலகி இருந்தார். அவர் அப்போது முதலே உடற்தகுதி பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அவரும் தயாராகி விட்டதாக கூறப்படும் நிலையில் அவரையும் அணியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ரசிகர்கள் அதிர்ச்சி
ரோஹித் சர்மாவை ஆஸ்திரேலியா அழைத்துச் சென்று உடற்தகுதியை பரிசோதித்து இருக்கலாம். ஆனால், விதிப்படி தான் நடப்போம் என அவரை தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அனுப்பி வைத்து, தற்போது அவர் ஆஸ்திரேலியா வரவில்லை என்றால் அணியில் இருந்து நீக்குவோம் என கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
என்ன நடக்கிறது?
இந்திய அணியில் ரோஹித் சர்மா விவகாரத்தில் என்ன தான் நடக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. பிசிசிஐ, தேர்வுக் குழு, இந்திய அணி நிர்வாகம் என அனைவரும் அவருக்கு எதிராக இருப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது.