ஆஸ்திரேலிய தொடர்
இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் ஒருநாள் தொடர், டி20 தொடர் மற்றும் டெஸ்ட் தொடர் வரும் நவம்பர் கடைசி வாரம் முதல் ஜனவரி வரை நடைபெற உள்ளது. இந்த தொடர்களுக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
காயம் காரணமாக நீக்கம்
மூன்று தொடர்களுக்கான இந்திய அணிகளிலும் ரோஹித் சர்மா பெயர் இடம் பெறவில்லை. அவருக்கு காயம் இருப்பதால் அவர் அணியில் தேர்வு செய்யப்படவில்லை என கூறப்பட்டது. ஆனால், காயத்துடன் இருக்கும் மற்றொரு வீரர் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பெரிய காயமா?
மேலும், ரோஹித் சர்மாவின் காயம் டிசம்பர், ஜனவரி வரை சரியாக வாய்ப்பே இல்லாத அளவுக்கு பெரிய காயமா? என்ற கேள்வியும் ரசிகர்களுக்கு எழுந்தது. அது குறித்து பிசிசிஐ எந்த விளக்கமும் அளிக்கவில்லை மருத்துவர்கள் கண்காணிப்பில் ரோஹித் இருக்கிறார் என்பதை மட்டுமே கூறி இருந்தது.
மயங்க் அகர்வால் சேர்ப்பு
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் ஆடி வரும் மயங்க் அகர்வாலும் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரும் ரோஹித் போலவே கடந்த சில போட்டிகளில் பங்கேற்கவில்லை. ஆனால், அவரது பெயர் டி20 அணி மற்றும் டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ளது.
ரசிகர்கள் கொதிப்பு
இந்த நிலையில், ரோஹித் சர்மா வேண்டும் என்றே, திட்டமிட்டு ஓரங்கட்டப்பட்டு இருப்பதாக ரசிகர்கள் கொதித்துப் போய் உள்ளனர். பிசிசிஐ மற்றும் இந்திய அணியில் பெரும் அரசியல் நடப்பதாக அவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
புகைப்படம் வெளியீடு
ரோஹித் சர்மாவும் தன்னை அணியில் தேர்வு செய்யாமல் புறக்கணித்து, அதற்கு காயம் என்ற காரணத்தை கூறியதை எதிர்த்துள்ளார். அணி அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் ரோஹித் சர்மா பயிற்சி செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு அதிர வைத்தது மும்பை இந்தியன்ஸ் அணி.
ரோஹித் சர்மா என்ன செய்தார்?
அடுத்ததாக தற்போது ரோஹித் சர்மா தன் சமூக வலைதள பக்கங்களில் "இந்திய கிரிக்கெட்டர்" என்ற பெயரை நீக்கி உள்ளதாக ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு எழுந்துள்ளது. சில ரசிகர்கள் புகைப்படத்துடன் இது குறித்து கூறி வருகின்றனர்.
உண்மையா?
இது உண்மை இல்லை என்றும் சிலர் கூறி வருகின்றனர். ரோஹித் சர்மா எப்போதும் தன் சமூக வலைதள பக்கங்களில் "இந்திய கிரிக்கெட்டர்" என குறிப்பிடவில்லை. இது பொய்யான தகவல் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.
இதற்கு முன்பும் நடந்துள்ளது
ஆனால், இதற்கு முன்பு இந்திய டெஸ்ட் அணியில் இருந்து ரோஹித் சர்மா தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்த போது ஒரு முறை அதை பற்றி சூசகமாக எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டு இருந்தார். அதே போலவே, இப்போதும் சூசகமாக தன் எதிர்ப்பை கூறி வருகிறார் என்கிறார்கள்.
ஓய்வை அறிவிப்பார்?
சிலர் இந்திய கிரிக்கெட்டர் என்ற வாசகத்தை ரோஹித் சர்மா நீக்கி இருப்பதால் அவர் விரைவில் சுரேஷ் ரெய்னா போல குறைந்த வயதிலேயே ஓய்வை அறிவிக்கப் போகிறார் என கூறி உள்ளனர். ரோஹித் நீக்கம் பெரும் சர்ச்சையாக மாறி வருகிறது.