என்ன நடந்தது?
ரோஹித் சர்மா 2020 ஐபிஎல் தொடரில் காயத்தில் சிக்கி அதில் இருந்து மீண்டுள்ளார். அவருக்கு உடற்தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தான் இந்திய அணி நிர்வாகம் அவருக்கு கெடு விதித்துள்ளது. இதில் முக்கியமான விஷயம், தேசிய கிரிக்கெட் அகாடமி அவரை அனுப்ப சம்மதம் கூறினால் மட்டுமே அவரால் ஆஸ்திரேலியா செல்ல முடியும்.
ரோஹித் காயம்
ஐபிஎல் தொடரின் போது ரோஹித் சர்மாவுக்கு இடது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. அதை காரணம் காட்டி, அவரை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் பிசிசிஐ தேர்வு செய்யவில்லை. ஆனால், ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டி, பிளே-ஆஃப் போட்டிகளில் ரோஹித் சர்மா பங்கேற்றார்.
சர்ச்சைகள்
இதை அடுத்து பிசிசிஐ முடிவு மீது சர்ச்சை வெடித்தது. ரோஹித் சர்மா காயம் விரைவில் குணமடையும் என்பதை தெரிந்தும் பிசிசிஐ எப்படி அவரை இரண்டு மாதங்கள் நடைபெற உள்ள ஆஸ்திரேலிய தொடரில் ஆட தேர்வு செய்யவில்லை என்ற கேள்வி எழுந்தது.
வேறு வழியில்லாமல் சேர்த்த பிசிசிஐ
ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரில் ஆடி விட்ட நிலையில் அவருடன் பேசி அவர் 70 சதவீதம் உடற்தகுதியுடன் இருப்பதை உறுதி செய்து, அவரை டெஸ்ட் அணியில் மட்டும் சேர்த்தது பிசிசிஐ. ஆனால், அவர் மற்ற வீரர்களுடன் ஆஸ்திரேலியா செல்லவில்லை.
உடற்தகுதி தேர்வு
அவர் துபாயில் இருந்து இந்தியா கிளம்பிச் சென்றார். உடற்தகுதியை நிரூபிக்க வேண்டி அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வந்தார். அவர் வலைப் பயற்சியில் ஈடுபட்டதாக சில நாட்கள் முன்பு தகவல் வெளியானது.
ரோஹித் மட்டும் ஏன்?
இதிலும் ஒரு சர்ச்சை உள்ளது. டெஸ்ட் தொடரில் ஆட உள்ள விக்கெட் கீப்பர் விரிதிமான் சாஹாவுக்கும் இரண்டு தசைப்பிடிப்புகள் இருந்தன. ஆனால், அவர் நேரடியாக ஆஸ்திரேலியா சென்றார். ரோஹித் சர்மா மட்டும் இந்தியா அனுப்பி வைக்கப்பட்டார்.
4 நாளில் வர வேண்டும்
தற்போது ஆஸ்திரேலியாவில் 14 நாட்கள் குவாரன்டைன் இருப்பதை சுட்டிக் காட்டி ரோஹித் சர்மா இன்னும் நான்கு அல்லது ஐந்து நாட்களில் ஆஸ்திரேலியாவில் இருக்க வேண்டும். அப்போது தான் அவர் குவாரன்டைன் முடித்து டிசம்பர் 11 நடைபெற உள்ள பயிற்சி டெஸ்ட் போட்டியில் பங்கேற்க முடியும் என கூறப்பட்டுள்ளது.
அதிர்ச்சி
இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மூலம் இந்த தகவல் வெளியாகி உள்ளது. ரோஹித் சர்மாவை இந்தியா அனுப்பி வைத்து விட்டு, தற்போது அவரை இன்னும் நான்கு நாட்களுக்குள் வரவில்லை என்றால் அணியில் இடம் கிடைப்பது கடினம் என கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இஷாந்த் சர்மாவுக்கும் சிக்கல்
மற்றொரு இந்திய அணி வீரர் இஷாந்த் சர்மா கடந்த மாதம் முதலே காயம் காரணமாக தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை மற்றும் பயிற்சி செய்து வருகிறார். அவரும் இன்னும் நான்கு நாட்களுக்குள் ஆஸ்திரேலியா செல்ல வேண்டும் என கெடு விதிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்கள் அதிருப்தி
மூத்த வீரரான ரோஹித் சர்மாவை பிசிசிஐ நடத்தி வரும் விதம் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சிலர் விராட் கோலிக்கு சாதகமாக முடிவுகள் இருப்பதாகவும் குற்றம் சுமத்தி வருகின்றனர். ரோஹித் சர்மா தேசிய கிரிக்கெட் அகாடமி ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே ஆஸ்திரேலியா செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.