ரோஹித் காயம்
ரோஹித் சர்மா தற்போது நடந்து வரும் 2020 ஐபிஎல் தொடரில் காயமடைந்தார். கடந்த மூன்று போட்டிகளில் அவர் மும்பை அணியில் பங்கேற்கவில்லை. அவர் காயத்தில் இருந்து மீண்டு வருவதாக கூறப்பட்டது. விரைவில் போட்டிகளில் பங்கேற்பார் என்றும் மும்பை அணி கூறி இருந்தது.
ஆஸ்திரேலிய தொடர்
இந்த நிலையில், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் அணிகள் அறிவிக்கப்பட்டன. அதில் ஒரு அணியில் கூட ரோஹித் சர்மா பெயர் இடம் பெறவில்லை. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஏன் இடம் இல்லை?
ரோஹித் சர்மா அணியின் முக்கிய பேட்ஸ்மேன் ஒருநாள் மற்றும் டி20 அணியின் துணை கேப்டன். அப்படி இருக்கையில் அவருக்கு ஏன் அணியில் இடம் அளிக்கவில்லை என்ற கேள்வி எழுந்தது. பிசிசிஐ அவருக்கு காயம் இருப்பதால் மருத்துவர் குழு கண்காணிப்பதாக கூறி இருந்தது.
3 வாரம் மட்டுமே
தேசிய கிரிக்கெட் அகாடமியின் பிசியோதெரபிஸ்ட் ரோஹித் சர்மா காயத்தில் இருந்து மீண்டு வர மூன்று வாரம் ஆகும் என தேர்வுக் குழுவிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. அப்படி பார்த்தால் கூட அவர் இன்னும் இரு வாரத்தில் முழு அளவில் தயாராகி விடுவார்.
திட்டமிட்ட செயலா?
ஆனாலும், அவரை நவம்பர் இறுதியில் துவங்கி ஜனவரி வரை நடக்க உள்ள தொடர்களில் சேர்க்கவில்லை என்றால் அது பலத்த சந்தேகத்தை கிளப்பி உள்ளது. இது திட்டமிட்ட செயலா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ரோஹித் முடிவு
இந்த நிலையில், ரோஹித் சர்மா தன்னை அணியில் இருந்து நீக்கியதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை என மும்பை அணி வட்டாரம் கூறுகிறது. இந்திய அணி அறிவிக்கப்பட்ட போதே அவர் பயிற்சி செய்யும் வீடியோ வெளியானது.
விடாமல் பயிற்சி
அடுத்ததாக அவர் தொடர் பயிற்சியில் ஈடுபட்டு இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. முழு உடற்தகுதி பெற்று மும்பை இந்தியன்ஸ் அணியின் மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்கும் அளவுக்கு தன்னை தயார்படுத்திக் கொள்ள இருக்கிறார் என கூறப்படுகிறது.
பதிலடி
இது பிசிசிஐ மற்றும் தேர்வுக் குழுவுக்கு ரோஹித் சர்மா விட்டுள்ள சவால் என்றே பார்க்க வேண்டி உள்ளது. காயத்தை குணப்படுத்தி, போட்டிகளில் பங்கேற்று தன் உடற்தகுதியை நிரூபிக்க இருக்கிறார் ரோஹித் சர்மா. அது மட்டுமின்றி சிறப்பாக ரன் குவித்தால் நிலைமை தலைகீழாக மாறும்.
எடுத்துத் தான் ஆக வேண்டும்
ரோஹித் ஐபிஎல் தொடரிலேயே காயத்தில் இருந்து மீண்டு சிறப்பாக ஆடி ரன் குவித்தால் இந்திய அணியில் அவரை சேர்த்தே ஆக வேண்டும். பிசிசிஐ அல்லது தேர்வுக் குழு அப்போது சிக்கலில் மாட்டிக் கொள்ளும். அவரை தேர்வு செய்யாமல் போனால் பலத்த விமர்சனம் எழும்.
துணை கேப்டன் பதவி கிடைக்குமா?
ஆனால், தற்போது மற்றொரு விஷயமும் கடும் விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது. ரோஹித் சர்மாவை நீக்கி உள்ள நிலையில் அணிக்கு புதிய துணை கேப்டனாக கேஎல் ராகுலையும் அறிவித்துள்ளனர். இது தற்காலிகமானதா? என தெரியவில்லை. ரோஹித் மீண்டும் வந்தால் அவருக்கு துணை கேப்டன் பதவி கிடைக்குமா?