ஏன் இந்தியா வந்தார்?
ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான அணியில் மட்டும் தேர்வு செய்யப்பட்டார். ஐபிஎல் தொடரின் முடிவில் தசைப்பிடிப்பு காரணமாக அவர் 70 சதவீத உடற்தகுதியுடன் மட்டுமே இருந்ததை அடுத்து அவர் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார்.
தேசிய கிரிக்கெட் அகாடமி
இந்தியாவில் தேசிய கிரிக்கெட் அகாடமியின் கண்காணிப்பில் உடற்தகுதியை முன்னேற்றி வந்தார் அவர். அவர் கிட்டத்தட்ட போட்டிகளில் ஆட தகுதி அடைந்து விட்டார் என சில நாட்கள் முன்பு கூறப்பட்டது. ஆனாலும், தேசிய கிரிக்கெட் அகாடமி அவர் போட்டிகளில் ஆட ஒப்புதல் அளிக்கவில்லை.
எப்போது தயார் ஆவார்?
ரோஹித் சர்மா டிசம்பர் இரண்டாம் வாரம் மட்டுமே தயார் ஆவார். அதன் பின் இரண்டு வாரம் அவர் பேட்டிங் பயிற்சி செய்ய வேண்டும் எனவும் கூறப்படுகிறது. ஜனவரி முதல் வாரத்தில் மட்டுமே அவர் தயார் ஆவார். ஆனால், ஆஸ்திரேலியாவில் இரண்டு வார குவாரன்டைனில் இருக்க வேண்டும்.
வேறு என்ன வழி?
இதை தவிர்க்க அவர் இப்போதே ஆஸ்திரேலியா செல்ல வேண்டும். அங்கே டிசம்பர் முதல் வரம் வரை குவாரன்டைனில் இருந்து விட்டு பின் இரண்டு வார பயிற்சியில் ஈடுபடலாம். அப்படி நடந்தாலும் அவரால் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆட முடியாது.
இரண்டு போட்டிகளில் நீக்கம்
இதை அடுத்து அவர் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் நீக்கப்பட்டுள்ளார். அதே சமயம், ரோஹித் சர்மாவை விட மோசமாக காயத்தில் சிக்கி இருந்த விரிதிமான் சாஹா டெஸ்ட் போட்டிகளில் ஆட தயாராகி இருக்கிறார்.
சாஹா நிலை
சாஹாவுக்கு இரண்டு இடங்களில் தசைப் பிடிப்பு ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் அவர் ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கேயே அவர் உடற்தகுதியை நிரூபித்து டெஸ்ட் தொடரில் ஆட தயாராகி விட்டார். அவருடன் ஒப்பிட்டால் ரோஹித் சர்மாவுக்கு சிறிய அளவிலான காயமே ஏற்பட்டு இருந்தது.
சாஹா மட்டும் எப்படி?
ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரில் கூட காயம் பாதி குணமான நிலையில் ஆடி இருந்தார். ஆனால், அவரை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பாமல், இந்தியாவுக்கு அனுப்பிய பிசிசிஐ, சாஹாவை மட்டும் எப்படி ஆஸ்திரேலியா அனுப்பி வைத்தது?
கங்குலி ஆதரவா?
விரிதிமான் சாஹா மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர். பிசிசிஐ தலைவர் கங்குலியின் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு அதிக முக்கியத்துவம் அளித்து ஆஸ்திரேலியா அனுப்பி வைக்கப்பட்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிசிசிஐ பதில் சொல்லுமா?
தசைப்பிடிப்பு ஏற்பட்ட இரண்டு வீரர்களை ஏன் இரண்டு விதமாக பிசிசிஐ நடத்தியது? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு பிசிசிஐ பதில் சொல்லுமா? ரோஹித் சர்மாவை ஆஸ்திரேலியா அனுப்பி இருந்தால் இந்நேரம் அவர் போட்டிகளில் ஆட தகுதியுடன் இருந்திருப்பாரே? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.