2019 உலகக்கோப்பை
மஞ்ச்ரேக்கர் - ஜடேஜா இடையே ஆன மோதல் 2019 உலகக்கோப்பை தொடரில் துவங்கியது. அந்த தொடரில் ஜடேஜாவுக்கு முதல் சில போட்டிகளில் அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அப்போது மஞ்ச்ரேக்கர், ஜடேஜா "பிட்ஸ் அண்டு பீஸஸ்" வீரர் என்றார். அதாவது அவர் முழுமையான கிரிக்கெட் வீரர் இல்லை என பொருள்படும்படி கூறி இருந்தார்.
கடும் சர்ச்சை
இது அப்போது பெரும் சர்ச்சை ஆனது. உலகக்கோப்பை தொடருக்கு நடுவே ட்விட்டரில் ஜடேஜா, மஞ்ச்ரேக்கரை கடுமையாக பேசி ட்வீட் செய்தார். நேரடியாகவே அவரை வாயை மூடும்படி கூறி, தன் அனுபவம் அளவுக்கு கூட அவர் கிரிக்கெட் ஆடவில்லை என விளாசி இருந்தார்.
வர்ணனையாளர் பதவி பறிப்பு
அதன் பின் சில மாதங்கள் கழித்து கடந்த மார்ச் மாதம் சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் பிசிசிஐ வர்ணனையாளர் பதவி பறிக்கப்பட்டது. அதை அடுத்து அவர் தொலைக்காட்சியில் நேரடியாக வர்ணனையாளர் பதவியை பெறலாம் என திட்டமிட்டார்.
கெஞ்சியும் இடமில்லை
அது குறித்து பிசிசிஐக்கு கடிதம் கூட எழுதினார். ஆனால், ஜடேஜா விவகாரத்தில் அவர் மீது கடும் விமர்சனம் இருந்ததால் அதை மனதில் வைத்து, அவர் கெஞ்சிய போதும் தொலைக்காட்சியிலும் அவருக்கு வர்ணனையாளர் பதவி கிடைக்கவில்லை.
2020 ஐபிஎல்
2020 ஐபிஎல் தொடரில் பல்வேறு ஊடகங்களில் கருத்து கூறி, விமர்சனம் செய்து வருகிறார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர். இந்த நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட இந்திய அணி குறித்து ட்விட்டரில் தொடர்ந்து கருத்துக்கள் கூறி வந்தார்.
ஐபிஎல் ஆட்டம்
இந்திய அணிக்கு ஐபிஎல் தொடரில் ஆடிய செயல்பாட்டை வைத்து வீரர்களை தேர்வு செய்துள்ளனர். அது தவறு என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். அணித் தேர்வை பற்றியும், அணியில் வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கு ஆதரவாகவும் அவர் பேசி வந்தார்.
டி20யில் ஜடேஜா
அப்போது ஒரு ரசிகர் டி20 போட்டியில் ஜடேஜா லாயக்கில்லை. அக்சர் பட்டேலை தேர்வு செய்து இருக்கலாம் என கூறினார். வம்படியாக ஒரு ரசிகரின் அந்த கருத்தை தேர்வு செய்து அதற்கு பதில் அளித்து சர்ச்சையை கிளப்பி இருக்கிறார் மஞ்ச்ரேக்கர்.
ஆமாம் போட்ட மஞ்ச்ரேக்கர்
அந்த ரசிகர் கூறுவதை முற்றிலும் ஏற்றுக் கொள்வதாக சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறி உள்ளார். ஜடேஜா நடப்பு ஐபிஎல் தொடரில் பேட்டிங்கில் நல்ல பார்மில் இருக்கிறார். ஆனால், பந்துவீச்சில் துவக்கத்தில் சுமாராக செயல்பட்டு வந்தார். அதை வைத்து தான் இந்த விமர்சனம் எழுந்துள்ளது.
பழைய பகை தான் காரணமா?
சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வேண்டும் என்றே ஜடேஜாவை விமர்சிக்கும் ரசிகரின் பதிவை தேர்வு செய்து, அதற்கு பதில் அளித்து, ஜடேஜாவை மீண்டும் சீண்டி இருப்பதாகவே பலரும் கூறி வருகின்றனர். இதற்கு பழைய பகை தான் காரணமா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பதிலடி கொடுப்பார்
உலகக்கோப்பை தொடர் போல ஜடேஜாவிடம் மீண்டும் திட்டு வாங்க தயாராகிக் கொள்ளுங்கள் என ரசிகர்கள் மஞ்ச்ரேக்கரை எச்சரித்து வருகின்றனர். வர்ணனையாளர் பணி பறிபோன பின்னும் அவர் திருந்தவில்லை என்றும் சிலர் கூறி வருகின்றனர்.