ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. முதல் இன்னிங்க்ஸில் ஆஸ்திரேலியா 326 ரன்கள், இந்தியா 283 ரன்கள் எடுத்தன. அடுத்து இரண்டாம் இன்னிங்க்ஸ் ஆடி வரும் ஆஸ்திரேலிய அணி மூன்றாம் நாள் முடிவில் 175 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
கோலி - டிம் பெய்ன் பேச்சு
ஆஸ்திரேலியா வலுவான நிலையில் இருக்கும் சூழலில், அந்த அணியில் கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங் செய்து வந்தார். அப்போது அவருக்கு கேட்ச் பிடித்ததாக இந்தியா அவுட் கேட்டது. அதற்கு அவுட் கொடுக்கவில்லை அம்பயர். அப்போது முரளி விஜய் மற்றும் கோலி டிம் பெய்ன்-ஐ தாண்டி நடந்து செல்லும்போது, கோலி, "இவர் சொதப்புனா இந்தியா 2-0 என தொடரில் முன்னிலை பெறும். அப்ப யார் பேசுவாங்க?" என டிம் பெய்ன்-ஐ கலாய்த்தார். பதிலுக்கு டிம் பெய்ன், "அதுக்கு நீங்க முதல்ல பேட்டிங் செஞ்சுருக்கணும்" என கூறினார்.
முதல் பேட்டிங்கால் சாதகம்
இது அப்படியே மைக்கில் பதிவாகி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பானது. பெர்த் மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமான சூழல் நிலவியது. ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. முதல் நாளில் பாதி நாள் வரை பிட்ச் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கவில்லை. அதை தான் டிம் பெய்ன், கோலியிடம் கூறியுள்ளார்.
கோலி அவுட் சர்ச்சை
முதல் இன்னிங்க்ஸில் இந்திய அணியில் கோலி சதம் அடித்து அணியை கரை சேர்த்தார். அவர் 123 ரன்கள் எடுத்து இருந்த போது சர்ச்சைக்குரிய கேட்ச் மூலம் ஆட்டமிழந்தார். தரையில் பட்டு பிடித்த கேட்சுக்கு மூன்றாவது அம்பயர் அவுட் கொடுத்து விட்டார் என ரசிகர்கள் கொந்தளித்தனர். அந்த சர்ச்சைக்கு பின் கோலி, டிம் பெய்ன்-ஐ வம்பிழுத்துள்ளார்.
இந்தியா பெர்த் டெஸ்டில் வெல்லுமா?
ஆஸ்திரேலியா இரண்டாம் இன்னிங்க்ஸில் 300 ரன்களுக்கும் மேல் முன்னிலை பெறும் பட்சத்தில் இந்திய அணியின் வெற்றி கடினமாக மாறி விடும். கடைசி இரண்டு நாட்கள் பேட்டிங் செய்வது கடினமாகவே இருக்கும்.