அத்துமீறுவது புதிதல்ல
இந்திய வீரர்களை ரசிகர்கள் பார்க்க விரும்பி அத்துமீறுவது புதிதல்ல. கடந்த சில ஆண்டுகளில் கோலி, ரோஹித், தோனி என முன்னணி வீரர்களை பார்க்க மைதானத்துக்குள் நுழைகின்றனர். அத்தனை காவலர்களையும் மீறி அவர்கள் எப்படி உள்ளே நுழைகிறார்கள் என்பது புரியாத புதிர் தான்.
ஹைடன் கேள்வி
இதே கேள்வியை முன்னாள் ஆஸ்திரேலியா வீரர் மேத்யூ ஹைடன், உடன் இருந்த சுனில் கவாஸ்கரிடம், "காவலர்கள் எங்கே?" என கேட்டுள்ளார். இதற்கு கவாஸ்கர் நக்கல் நையாண்டியுடன் ஒரு உண்மையான பதிலை கூறி உள்ளார்.
எங்கே பார்ப்பார்கள்?
கவாஸ்கர், "அவர்கள் (காவலர்கள்) போட்டியை பார்த்துக் கொண்டு இருப்பார்கள். அதனால், அவர்களால் அத்துமீறலை தடுக்க முடியாது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்காவில் எல்லாம் காவலர்கள் போட்டிக்கு முதுகை காட்டிக் கொண்டு, கூட்டத்தை கண்காணித்துக் கொண்டு இருப்பார்கள். அதனால், யாராவது எதையாவது எறிந்தால் கூட அவர்கள் அதை பார்த்து விடுவார்கள்" என்றார்.
வாய்ப்பை விட மாட்டார்கள்
மேலும், "இங்கே கிரிக்கெட் அனைவராலும் விரும்பப்படுகிறது. அதனால், அவர்கள் ஒரு வாய்ப்பை கூட விட்டுவிட மாட்டார்கள். இப்போது விராட் கோலி சிறப்பாக ஆடும் நிலையில், நீங்கள் கூட்டத்தை பார்த்துக் கொண்டு இருப்பீர்களா? இல்லை போட்டியை பார்ப்பீர்களா?" என நச்சென்று கேட்டார்.
இது தான் காரணம்
இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளில் ஏன் ரசிகர்கள் அத்துமீறுகிறார்கள், எப்படி காவலர்கள் அதை கண்காணிக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள் என புட்டு புட்டு வைத்து விட்டார் கவாஸ்கர். ஆனால், இந்த பிரச்சனைக்கு இதுவரை தீர்வு எட்டப்படவில்லை.
பாதுகாப்பு குளறுபடிகளால் ஆபத்து
ஒருவேளை இந்தியாவில் இத்தனை பாதுகாப்பு குளறுபடிகள் இருப்பதை தவறாக பயன்படுத்த நினைத்தால் அப்போது வருந்திப் பயனில்லை. இதுவரை ரசிகர்கள் தங்கள் ஆதர்ச கிரிக்கெட் நாயகர்களை கட்டிப் பிடிக்கவும், செல்ஃபி எடுக்கவுமே உள்ளே நுழைகிறார்கள். அனால், எப்போதும் இதற்காகவே உள்ளே நுழைவார்கள் என சொல்ல முடியாது.