ரோஹித்துக்கே வாய்ப்பில்லை
ஆஸ்திரேலிய நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி ஒருநாள் தொடர், டி20 தொடர் மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. அதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் ரோஹித் சர்மா மூன்று அணியிலும் இடம் பெறவில்லை.
வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது
அதே போல சூர்யகுமார் யாதவ்வுக்கு இந்த முறையும் இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அவர் ரோஹித் சர்மா அணியை சேர்ந்தவர் என்பதால் தான் கேப்டன் கோலி அவரை ஓரங்கட்டி இருப்பதாக ரசிகர்கள் கடுமையாக குற்றம் சுமத்தி உள்ளனர்.
ரோஹித் காயமா?
ரோஹித் சர்மாவுக்கு காயம் காரணமாக இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. ஆனால், அவர் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அது பெரும் சர்ச்சை ஆகி உள்ளது.
காத்திருக்கிறார்
இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக ஆடியும் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. இது முதல்முறையும் அல்ல. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அவர் வாய்ப்புக்காக காத்துக் கொண்டு இருக்கிறார்.
ஐபிஎல் செயல்பாடு
2018 ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் 512 ரன்கள் குவித்தார் சூர்யகுமார். 2019 ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் 424 ரன்கள் குவித்தார். 2020 ஐபிஎல் தொடரில் 2 அரைசதம் உட்பட 11 போட்டிகளில் 283 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 31 ஆக உள்ளது.
சிறப்பான செயல்பாடு
அவர் ஐபிஎல் தொடரில் மட்டுமல்லாது, உள்ளூர் தொடர்களிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மும்பை அணிக்காக ரஞ்சி ட்ராபி தொடரிலும் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். இப்படி நல்ல ரெக்கார்டு இருக்கும் போதும் அவருக்கு ஆஸ்திரேலிய தொடரில் டி20 அணியில் கூட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
கோலி - ரோஹித் விரிசல்
விராட் கோலி - ரோஹித் சர்மா இடையே விரிசல் இருப்பதாக கடந்த ஓராண்டாக அவ்வப்போது வதந்தி கிளம்பி வந்தது. அதை நிரூபிப்பது போல சமீபத்திய நிகழ்வுகள் இருப்பதாக ரசிகர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர். குறிப்பாக ரோஹித் சர்மா நீக்கத்திற்கு அது தான் காரணம் என கூறி வருகின்றனர்.
மும்பை இந்தியன்ஸ் வீரர்
சூர்யகுமார் யாதவ்வும் மும்பை இந்தியன்ஸ் வீரர், ரோஹித் சர்மா அணியை சேர்ந்தவர் என்பதால் தான் விராட் கோலி அவருக்கு வாய்ப்பு அளிக்கவில்லை என பரபரப்பாக புகார் கூறி வருகிறார்கள் ரசிகர்கள். இதை அத்தனை எளிதில் புறந்தள்ளவும் முடியவில்லை.
பெங்களூர் அணி வீரர்கள்
மேலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர்களுக்கு இந்திய அணியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முகமது சிராஜ்ஜிக்கு டெஸ்ட் அணியில் இடம் அளித்திருப்பது தான் இந்த புகார் எழ முக்கிய காரணம்.
இனி வாய்ப்பு கிடைக்காது
30 வயதான நிலையில் சூர்யகுமார் யாதவ்வுக்கு இப்போது அணியில் இடம் கிடைக்கவில்லை என்றால் இனி இடம் கிடைக்கக் வாய்ப்பில்லை. அடுத்த வருடம் அவர் வயதான வீரர் என அணியில் இடம் அளிக்கபடாமல் புறந்தள்ளப்படுவார்.