ஆஸ்திரேலியாவை திணற வைத்த இந்தியா
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி சிட்னி டெஸ்டில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா முதல் இன்னிங்க்ஸில் 622 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய பந்துவீச்சை திணற வைத்தது.
வெற்றி கேள்விக் குறி
ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் முதல் நாளில் 4 விக்கெட்களும் இரண்டாம் நாளில் 3 விக்கெட்களும் மட்டுமே வீழ்த்தினர். 7 விக்கெட்கள் வீழ்ந்த நிலையில் இந்தியா 622 ரன்கள் குவித்து இருந்த போது டிக்ளர் செய்தது. இந்தியா 600 ரன்களுக்கும் மேல் எடுத்துள்ளதால் ஆஸ்திரேலியாவின் வெற்றி கேள்விக் குறியாகி உள்ளது.
கருத்து வேறுபாடு
ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு மிக மோசமாக இருந்த நிலையில், அதற்கு காரணம், கேப்டன் டிம் பெய்ன் மற்றும் பந்துவீச்சாளர்கள் வேறு வேறு திசைகளில் திட்டம் வகுத்து செயல்பட்டது தான் காரணம் என அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் டேவிட் சாகர் கூறி இருந்தார்.
வாக்குவாதம் நடந்ததா?
போட்டியின் முதல் நாள் அன்று உணவு இடைவேளையிலும், போட்டியின் முடிவிலும் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், கேப்டன் டிம் பெய்ன் மற்றும் பந்துவீச்சாளர்கள் சிறிய வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறி இருந்தார் டேவிட். இது ஆஸ்திரேலிய ரசிகர்கள் இடையே பரபரப்பை கூட்டியது.
உண்மை அல்ல
இது குறித்து விளக்கம் அளித்துள்ள ஆஸி. கேப்டன் டிம் பெய்ன், "நாங்கள் போட்டி முடிந்தவுடன் விவாதம் செய்வோம். ஆனால், நாங்கள் வேறு வேறு திசைகளில் இருக்கிறோம் என்பது உண்மை அல்ல" என கூறினார்.
நாங்கள் தெளிவாக இருந்தோம்
"எல்லா சமயத்திலும் என்ன செய்வது என்பதில் நாங்கள் தெளிவாக இருந்தோம். காலை மற்றும் உணவு இடைவேளைக்கு பின் சுமார் ஒரு மணி நேரம் எங்கள் திட்டங்கள் தவறாக சென்றன" என கூறினார் டிம் பெய்ன்.
தோல்வியை நோக்கி ஆஸி.
ஆஸ்திரேலிய அணிக்குள் பிரச்சனையோ, இல்லையோ அந்த அணி சிட்னி டெஸ்டில் தோல்வியை நோக்கி பயணித்துக் கொண்டுள்ளது என்பதே உண்மை. மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 236 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்துள்ளது. இந்திய அணியை விட 386 ரன்கள் பின்தங்கி உள்ளது.
டிரா செய்ய முயற்சி
மூன்றாம் நாளில் மழை குறுக்கிட்டு போட்டியின் 16 ஓவர்கள் தடைபட்டது. இதனால் அடுத்த இரண்டு நாட்கள் மழை குறுக்கிட்டால், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் கட்டை போட்டு இந்த டெஸ்டை டிரா செய்ய முயற்சி செய்ய வாய்ப்புள்ளது.