செப்டம்பரில் ஐபில் போட்டிகள்
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 4 மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் கடந்த 8ம் தேதி இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கிடையில் மீண்டும் துவங்கியுள்ளன. இதையடுத்து இந்தியாவிலும் ஐபிஎல் போட்டிகளை வரும் செப்டம்பர் மாதத்தில் துவங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
டிசம்பர் 3ல் துவக்கம்
இந்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் வரும் டிசம்பர் 3ம் தேதி முதல் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொடருக்காக ஐபிஎல் போட்டிகளை நவம்பர் 8ம் தேதிக்குள் முடிக்கவும் பிசிசிஐ திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
முக்கிய தொடர் -பிரட் லீ
கடந்த 2018 -19ல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியினர் அந்த மண்ணில் அவர்களை 2க்கு 1 என்ற கணக்கில் முதல் முறையாக வெற்றி கொண்டு வரலாறு படைத்தனர். இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடர் மிகவும் கவனத்திற்குள்ளாகியுள்ளது. இதனிடையே இந்த தொடர் மிகவும் முக்கியமானது என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிரட் லீ தெரிவித்துள்ளார்.
பிரட் லீ பாராட்டு
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையிலான ஆஷஸ் தொடர் போன்று இந்த தொடரும் மிகவும் சிறப்பான இரு போட்டி அணிகளுக்கிடையில் நடைபெறுவதாகவும் பிரட் லீ குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த தொடர் வீரர்கள், கிரிக்கெட் ஆஸ்திரேலியா மற்றும் ரசிகர்களுக்கு மிகவும் முக்கியமானது என்றும் அவர் கூறியுள்ளார்.
தள்ளி வைப்பதே சிறந்தது
ஆஸ்திரேலியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள டி20 உலக கோப்பை தொடரை ஐசிசி தள்ளி வைப்பதே சிறந்தது என்றும் பிரட் லீ தெரிவித்துள்ளார். சாதாரண காலத்திலேயே 16 அணிகளை ஒரு நாட்டில் வைத்து சமாளிப்பது எளிதானது அல்ல என்று தெரிவித்துள்ள அவர், இந்த ஊரடங்கு காலத்தில் 16 அணிகளை ஒரே இடத்தில் வைத்து தொடரை நடத்துவது சாத்தியம் இல்லாதது என்றும் கூறியுள்ளார்.