வெற்றிக்கு முதல் காரணம் புஜாரா
இந்தியாவின் டெஸ்ட் தொடர் வெற்றிக்கு முதல் காரணம் புஜாரா தான். இது நாம் எல்லோரும் அறிந்த செய்தி தான். இரண்டு அணிகளுக்கும் இடையே பேட்டிங்கில் இருந்த பெரிய வித்தியாசம் புஜாரா தான். அவர் 521 ரன்கள் அடித்து அசத்தினார். டி20 யுகத்தில் டெஸ்ட் போட்டியை எப்படி ஆட வேண்டும் என ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் பாடமெடுத்தார் புஜாரா.
இரு மடங்கு அதிக ரன்கள்
ஆஸ்திரேலிய வீரர்களில் இந்த தொடரில் அதிக ரன் அடித்தவர்கள் மார்கஸ் ஹாரிஸ் (258 ரன்கள்), ட்ராவிஸ் ஹெட் (237 ரன்கள்). அவர்களை விட இரு மடங்கு அதிக ரன்களை அடித்து வாயைப் பிளக்க வைத்தார் புஜாரா. ஆஸ்திரேலிய வீரர்கள் ஒருவர் கூட சதம் அடிக்காத நிலையில், கோலி, ரிஷப் பண்ட் தலா 1 சதம் மட்டுமே அடித்துள்ள நிலையில், புஜாரா 3 சதங்கள் அடித்துள்ளார்.
பும்ரா துல்லிய பந்துவீச்சு
புஜாராவுக்கு அடுத்து இந்திய அணியில் முக்கிய வீரராக இந்த தொடரில் செயல்பட்டவர் பும்ரா. வேகப்பந்துவீச்சில் தனக்கென தனி பாணி வைத்திருக்கும் பும்ரா இந்த தொடரில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய பந்துவீச்சாளராக திகழ்கிறார்.
21 விக்கெட்கள் எடுத்த பும்ரா
இந்த ஆஸ்திரேலியாவின் நாதன் லியோனும் 21 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். ஆனால், அவர் 242 ஓவர்கள் வீசி 21 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். பும்ரா 157 ஓவர்கள் மட்டுமே வீசி 21 விக்கெட்கள் எடுத்துள்ளார். பும்ரா துல்லியமாகவும், நிலையாகவும் பந்து வீசியது எதிரணி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தி மற்ற பந்துவீச்சாளர்களும் விக்கெட் எடுக்க காரணமாக இருந்தார்.
ரிஷப் பண்ட் அட்டகாசம்
ரிஷப் பண்ட் மீது பல புகார்கள் இருந்தன. விக்கெட் கீப்பிங் சரியில்லை என்பதோடு பேட்டிங்கில் பொறுப்பில்லாமல் ஆடுகிறார்.தேவையே இல்லாமல் தூக்கி அடித்து ஆட்டமிழந்து விடுகிறார் என்ற குற்றசாட்டு இருந்தது. இந்த டெஸ்ட் தொடரிலும் முதல் மூன்று போட்டிகளில் ஒவ்வொரு இன்னிங்க்ஸிலும் 30 ரன்களை ஒட்டியே ரன் எடுத்தார்.
20 கேட்ச்கள் பிடித்த பண்ட்
ஆனால், நான்காவது போட்டியில் அவர் அடித்த டெஸ்ட் சதம் இன்னும் நீண்ட நாட்களுக்கு பேசப்படும். தன் ஒன்பதாவது போட்டியிலேயே இரண்டாவது டெஸ்ட் சதத்தை எட்டி தன் திறனை நிரூபித்துள்ளார். மேலும், விக்கெட் கீப்பிங்கில் 20 கேட்ச்கள் பிடித்து சாதனை செய்துள்ளார். பேட்டிங்கில் கோலியை முந்தி 350 ரன்கள் எடுத்து புஜாராவுக்கு அடுத்து இந்த தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெயரைப் பெற்றுள்ளார் பண்ட்.
ஷமி முன்னேற்றம்
முஹம்மது ஷமி இந்த டெஸ்ட் தொடரில் சில இன்னிங்க்ஸ்களில் பெரிய அளவில் விக்கெட்கள் எடுக்காவிட்டாலும், பும்ரா - இஷாந்த் சர்மாவுடன் இணைந்து பந்து வீசும் போது மிக சிறப்பான பங்களிப்பை அளித்தார். பும்ரா போன்றே ஷமியும் பந்துவீச்சில் தன் நேர்த்தியை தொடர்ந்து கடைபிடிக்கத் துவங்கியுள்ளார்.
16 விக்கெட்கள் வீழ்த்திய ஷமி
இந்த டெஸ்ட் தொடரில் 16 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார் ஷமி. எகனாமி மட்டுமே சற்று அதிகமாக 3.06 என இருக்கிறது. ரன்களை விட்டுக் கொடுத்திருந்தாலும் தேவையான சமயங்களில் விக்கெட் வீழ்த்தத் தவறவில்லை.
அறிமுக வீரர் மாயன்க் அகர்வால்
மாயன்க் அகர்வால் இந்திய டெஸ்ட் அணியின் துவக்க வீரர் இடத்தை சரியாக பிடித்துக் கொண்டார். ஆஸ்திரேலியாவில் அறிமுகம் பெற்ற அவர் தன் முதல் போட்டியிலேயே அரைசதம் அடித்து அசத்தினார். இரண்டாவது போட்டியிலும் அரைசதம் அடித்து அணிக்கு தேவையான துவக்கம் அளித்தார் மாயன்க்.
கோலியை விட முக்கியமான வீரர்
கோலி இந்த தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 4 போட்டிகளில் 282 ரன்கள் அடித்து 3வது இடத்தில் இருந்தாலும், மாயன்க் அகர்வால், இந்திய அணியின் துவக்க வீரர் பிரச்சனையை தீர்த்து வைத்ததோடு 2 போட்டிகளில் 195 ரன்கள் அடித்து ஆச்சரியப்படுத்தியதற்காக இவருக்கு அணியின் வெற்றியில் முக்கிய பங்கு ஆற்றியதற்காக ஐந்தாம் இடம் அளிக்கலாம்.
ஒரீரு போட்டிகளில் சிறந்த பங்களிப்பு
ஒரீரு போட்டிகள் மட்டுமே ஆடி இருந்தாலும் குல்தீப், ஜடேஜா, அஸ்வின் ஆகியோரும் சுழற்பந்து வீச்சில் சிறப்பான பங்களிப்பை அளித்தனர். அதே போல பேட்டிங்கில் இரண்டு அரைசதங்கள் அடித்த ரஹானேவையும் குறிப்பிட வேண்டும்.