இந்திய ரன் ரேட் சரிவு
3வது டி20 போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 164 ரன்கள் குவித்தது. அடுத்து இந்திய அணி சேஸ் செய்த போது நான்காவது வீரராக களம் இறங்கினார் ராகுல். 6.5 ஓவர்களில் 67 ரன்கள் இருந்த இந்திய அணியின் ரன் ரேட், ராகுல் களம் இறங்கிய பின் சரியத் துவங்கியது.
ராகுல் சொதப்பினார்
20 பந்துகளை சந்தித்த ராகுல் வெறும் 14 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். நிறைய பந்துகளில் ரன் அடிக்கவில்லை. ஏற்கனவே, முதல் போட்டியில் சொதப்பிய ராகுல் மீண்டும் மூன்றாவது போட்டியிலும் அணியை கைவிட்டார்.
பொறுப்பற்ற ரிஷப் பண்ட்
அவர் ஆட்டமிழந்த உடன் உள்ளே வந்த ரிஷப் பண்ட் மீண்டும் ஒரு முறை பொறுப்பில்லாமல் ஆடி தான் சந்தித்த முதல் பந்திலேயே கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். முதல் போட்டியில் ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் இணைந்து அணியை ஓரளவு மீட்ட வேளையில், ரிஷப் பண்ட் அப்போதும் தேவையற்ற ஷாட் ஆடி ஆட்டமிழந்தார்.
வெற்றியால் தலை தப்பியது
நேற்றைய போட்டியில் இவர்கள் ஆட்டமிழந்த பின்னர் தினேஷ் கார்த்திக், கோலி இணைந்து பொறுப்பாக ஆடி இந்திய அணியை மீட்டனர். அதனால், ராகுல், பண்ட் தலை தப்பியது என சொல்லலாம். இல்லையெனில், இன்று இணையத்தில் அவர்களை ரசிகர்கள் புரட்டி எடுத்திருப்பார்கள்.
டி20 தொடரில் மோசமான செயல்பாடு
ராகுல், பண்ட் இருவரும் இந்த டி20 தொடரில் 2 போட்டிகளில் பேட்டிங் வாய்ப்பு பெற்றனர். அதில் ராகுல் 27 ரன்களும், பண்ட் 20 ரன்களும் எடுத்துள்ளனர். அதற்கு முன்பு நடந்த வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் ரிஷப் பண்ட் ஒரு அரைசதம் அடித்தார். அதை தவிர்த்து மற்ற இரண்டு இன்னிங்க்ஸ்களில் மொத்தமாக 6 ரன்கள் மட்டுமே எடுத்தார். ராகுல் 3 போட்டிகளில் 59 ரன்கள் எடுத்தார்.
எதற்கு மீண்டும் வாய்ப்பு?
ரிஷப் பண்ட் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே சிறந்த செயல்பாடுகளை செய்துள்ளார். ராகுல் எந்த வகை போட்டியிலும் தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் நிலையாக ரன் குவிக்கவில்லை. இப்படி தொடர்ந்து டி20, ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு பெற்று வரும் இருவரும் நிலையாக பேட்டிங் செய்து ரன் குவிக்காவிட்டால் எதற்கு அணியில் நீடிக்கிறார்கள்? என்ற கேள்வி எழுகிறது.