பயிற்சிப் போட்டி
ஆஸ்திரேலியாவில் நவம்பர் 27 முதல் இந்திய அணி ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. இதுவரை டெஸ்ட் போட்டிக்காக தயாராகி வந்த இந்திய அணி, ஒருநாள் தொடருக்கு தயார் ஆக உள்ளது. அதற்காக பயிற்சிப் போட்டியில் பங்கேற்றது.
இரண்டு அணிகள்
சிகே நாயுடு லெவன் என்ற அணிக்கு விராட் கோலி கேப்டனாக இருந்தார். ரஞ்சித்சிங்ஜி லெவன் என்ற அணிக்கு கேஎல் ராகுல் கேப்டனாக செயல்பட்டார். இந்தப் போட்டி ஒருநாள் போட்டிக்கான பயிற்சி என்றாலும் டெஸ்ட் அணி வீரர்களும் பங்கேற்றனர்.
மழையால் தடை
டெஸ்ட் வீரர்களுக்கும் பயிற்சி கிடைக்கும் என்பதால் அவர்களும் ஆடினர். போட்டி துவங்க இருந்த நிலையில் மழை பெய்ததால் தடை ஏற்பட்டது. பின் மழை விட்ட பின் போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் கேஎல் ராகுல் அணி பேட்டிங் செய்தது.
ராகுல் அபார ஆட்டம்
அந்த அணிக்கு ஷிகர் தவான், மயங்க் அகர்வால் துவக்கம் அளித்தனர். கேஎல் ராகுல் 66 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார், அந்த அணி 40 ஓவர்களில் 235 ரன்கள் குவித்தது. அடுத்து விராட் கோலி அணி சேஸிங் செய்தது.
கோலி அதிரடி
விராட் கோலி அணிக்கு ப்ரித்வி ஷா, ஷுப்மன் கில் துவக்கம் அளித்தனர். கேப்டன் கோலி அதிரடி ஆட்டம் ஆடி 58 பந்துகளில் 91 ரன்கள் குவித்தார். அஸ்வின் கடைசி வரை களத்தில் நிற்க அந்த அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கோலி அணி வெற்றி
35.4 ஓவர்களில் கோலி அணி வெற்றி பெற்றது. இரண்டு அணிகளிலும் கேப்டன்கள் மட்டுமே சிறப்பாக ஆடினர். மற்ற வீரர்கள் சராசரியாகவே ஆடி உள்ளனர். தொடர்ந்து இது போன்ற பயிற்சிப் போட்டிகளில் இந்திய வீரர்கள் ஆடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டாயத்தில் இந்திய அணி
ஒருநாள் அணியில் ரோஹித் சர்மா இல்லாத நிலையில், சரியான துவக்க வீரரை தேர்வு செய்யும் கட்டாயத்திலும் இந்திய அணி உள்ளது. இந்த பயிற்சிப் போட்டிகளில் தான் துவக்க வீரரை அடையாளம் காண முடியும். ஷுப்மன் கில், மயங்க் அகர்வால் இடையே தான் போட்டி நிலவுகிறது.