ரோஹித் நீக்கம்
ரோஹித் சர்மா சிறிய காயத்தை வைத்து மூன்று மாதங்கள் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற உள்ள ஒருநாள் தொடர், டி20 தொடர் மற்றும் டெஸ்ட் தொடர்களில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
உடற்தகுதியுடன் இருக்கிறார்
இந்த நிலையில், தான் உடற்தகுதியுடன் இருப்பதை நிரூபிக்க ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரிலேயே களமிறங்கி உள்ளார். கடைசி லீக் போட்டி மற்றும் பிளே-ஆஃப் சுற்றில் அவர் பங்கேற்றார். அவர் பேட்டிங் மற்றும் பீல்டிங் செய்த போது அதில் அவருக்கு எந்த சிக்கலும் ஏற்படவில்லை.
இன்னும் பதில் சொல்லாத பிசிசிஐ
ரோஹித் சர்மா முழு உடற்தகுதியுடன் இருக்கும் நிலையில் அவரை ஏன் இன்னும் இந்திய அணியில் தேர்வு செய்யவில்லை என பலரும் பிசிசிஐயை கேள்வி கேட்டு வருகின்றனர். ஆனால், இதுவரை பிசிசிஐ அந்த கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லை.
சேவாக் கேள்வி
இந்த நிலையில், ரோஹித் சர்மாவின் நீக்கத்தை குறித்து தொடர்ந்து கண்டித்து வரும் சேவாக், தற்போது பிசிசிஐ யாருக்குமே தெரியாத காரணத்தை வைத்து நீக்க முடியாது என்றும், காயமடைந்த வீரரைக் கூட அணியில் தேர்வு செய்ய முடியும் என்றும் கூறி உள்ளார்.
ஏன் இப்படி?
சேவாக் கூறுகையில், மும்பை இந்தியன்ஸ் பிசியோதெரபிஸ்ட் ரோஹித் சர்மா எப்போது குணமடைவார் என்றே தெரியாது என கூறி இருந்தால், அதை வைத்து தேர்வுக் குழு இந்திய அணியை தேர்வு செய்து இருந்தால் நான் கூட இப்போது பேச முடியாது என்று கூறினார்.
வேண்டும் என்றே தேர்வு செய்யவில்லை
அதாவது மும்பை அணியில் ரோஹித் ஆடுகிறார் என்றால் அவர் விரைவில் குணமடைவார் என்றே மும்பை அணி, பிசிசிஐக்கு அறிக்கை அளித்து இருக்கும். ஆனாலும், அவரை அணியில் தேர்வு செய்யவில்லை என கூறி உள்ளார் சேவாக்.
2011 உலகக்கோப்பைக்கு முன்
தன் கிரிக்கெட் வாழ்வில் நடந்த சம்பவத்தை சேவாக் உதாரணமாக கூறினார். 2011 உலகக்கோப்பை தொடருக்கு முன் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. 2010 டிசம்பரில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற நிலையில் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் மற்றும் பிசிசிஐ சிகிச்சையை தள்ளிப் போடும் படி கூறினார்கள்.
எல்லோருக்கும் தெரியும்
அதன் படி தான் அறுவை சிகிச்சை செய்து கொள்ளாமல் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ஆடி, ஒருநாள் போட்டிகளில் ஆடாமல் இருந்து காயத்தை பெரிதாக்கிக் கொள்ளாமல் இருந்ததாகவும், ஜெர்மனிக்கு போய் மருந்து செலுத்திக் கொண்டு வந்ததாகவும், இந்த விஷயங்கள் எல்லோருக்கும் தெரியும் என்றும் கூறினார் சேவாக்.
இதே போல செய்யலாமே
ரோஹித் பிரச்சனைகள் எல்லோருக்குமே தெரியும் என்ற நிலையில், அவரை ஆஸ்திரேலிய தொடருக்கு தேர்வு செய்து இருக்கலாம். அவர் உடற்தகுதி பெற முடியாத நிலையில், மாற்று வீரரை அனுப்பலாம். பாதுகாப்பு வளையம் போன்ற சிக்கல்கள் ஏற்பட்டால் இப்போதே மாற்று வீரரையும் ரோஹித்துடன் அனுப்பலாம் என்றார் சேவாக்.
இறுதிப் போட்டியில் ஆடினால்..
தற்போது ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியிலும் ஆடி, முழு உடற்தகுதியுடன் இருந்தால் தேர்வுக் குழு அப்போதும் அவரை அணியை விட்டு நீக்கி வைத்திருக்குமா? அப்படி என்றால் ஒரு நல்ல இந்திய வீரரை யாருக்கும் காரணமே தெரியாமல் நீக்கி வைத்துள்ளீர்கள் என்று அர்த்தம் என சரமாரியாக விளாசினார் சேவாக். ரோஹித் சர்மா விவகாரம் குறித்து பிசிசிஐ விரைவில் விளக்கம் அளிக்க வேண்டும்.