இரண்டு நாளில்..
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ள ஒருநாள் கிரிக்கெட் தொடர் நவம்பர் 27 அன்று துவங்க உள்ளது. இன்னும் இரண்டு நாட்களே உள்ளது. இந்த நிலையில், இந்திய அணியில் முக்கிய வீரரான ரோஹித் சர்மா இல்லாததால் யாரை துவக்க வீரராக ஆட வைப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது.
முக்கிய வீரர் இல்லை
ரோஹித் சர்மா தசைப்பிடிப்பில் இருந்து மீண்டு வருவதன் காரணமாக ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரில் பங்கேற்கவில்லை. அவர் இல்லாததால் வேறு துவக்க வீரரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இந்திய அணி.
அந்த மூன்று வீரர்கள்
தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய அணியில் வழக்கமாக ரோஹித் சர்மாவுடன் துவக்க வீரராக இறங்கும் ஷிகர் தவான் தவிர்த்து, கேஎல் ராகுல், ஷுப்மன் கில், மயங்க் அகர்வால் என மூன்று துவக்க வீரர்கள் உள்ளனர். இவர்களில் யாரை கோலி ரோஹித் சர்மாவுக்கு மாற்றாக துவக்க வீரராக களம் இறக்குவார்?
கீப்பிங் பணி
கேஎல் ராகுல் தற்போது ஒருநாள் மற்றும் டி20 அணியில் விக்கெட் கீப்பிங் பணியை செய்து வருகிறார். எனவே, அவரது பேட்டிங் பளுவை குறைக்கும் வகையில் மிடில் ஆர்டரில் ஆட வைக்கப்பட்டு வருகிறார். அவரை இந்த ஆஸ்திரேலிய தொடரில் மட்டும் துவக்க வீரராக ஆட வைக்க கோலி முடிவு செய்ய வாய்ப்பு குறைவு.
ஷுப்மன் கில் எப்படி?
ஷுப்மன் கில் 2020 ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்தார். ஆனால் அவர் குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியது விமர்சனத்துக்கு உள்ளானது. அவர் அந்த தொடரில் 120க்கும் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டை ஒட்டியே பேட்டிங்கில் ரன் குவித்து இருந்தார்.
அவருக்கே வாய்ப்பு
அந்த ஸ்ட்ரைக் ரேட் டி20 போட்டிகளில் குறைவு என்றாலும், ஒருநாள் போட்டிகளுக்கு ஏற்ற ஸ்ட்ரைக் ரேட் தான். அதனால் அவர் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் துவக்க வீரராக களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது.
11 நாட்கள்
மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று டி20 போட்டிகள் 11 நாட்கள் இடைவெளியில் நடைபெற உள்ளது. இத்தனை நெருக்கமாக போட்டிகள் நடக்க உள்ளதால் ஷுப்மன் கில்லை இந்த இரண்டு தொடர்களிலும் துவக்க வீரராக பயன்படுத்தவே கோலி முடிவு செய்வார்.
டெஸ்ட் வீரர்
மயங்க் அகர்வால் டெஸ்ட் அணியின் முக்கிய துவக்க வீரர் என்பதால் அவரை ஒருநாள் தொடரில் பயிற்சி அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு போட்டி மட்டும் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. எனினும், அது சரியான முடிவாக அமையுமா? என்ற கேள்வியும் உள்ளது.