எல்லாமே தலைகீழ்
இந்த தொடர் முழுவதுமே எல்லாம் தலைகீழாகத்தான் நடந்துள்ளது. பாகிஸ்தான் கோப்பை வெல்லும் என கணிக்கப்பட்டது. இந்தியா, பாகிஸ்தான் இறுதி வரை செல்லும் என கூறப்பட்டது. இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஆப்கானிஸ்தான், ஹாங்காங் போன்ற அணிகளை எளிதில் வெல்லும் என நாம் நினைத்தோம். ஆனால், இது எதுவும் நடக்கவில்லை. இந்தியா இறுதிக்கு முன்னேறியது ஒன்று மட்டுமே சரியாக நடந்துள்ளது. இதன் காரணமாகவே, இன்று வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் என்ன நடக்குமோ என்ற ஒரு எதிர்பார்ப்பு உள்ளது.
காயமும், வெற்றியும்
இந்தியா இதுவரை 6 முறை ஆசிய கோப்பை வென்றுள்ளது. தற்போது 7வது முறையாக கோப்பை வெல்ல காத்திருக்கிறது. வங்கதேசம், இந்தியா இரண்டு அணிகளும் கடந்த 2016 ஆசிய கோப்பை இறுதியில் மோதின. டி20 தொடராக நடந்த அந்த ஆசிய கோப்பையை இந்தியா கைப்பற்றியது. தற்போது மீண்டும் இந்தியா, வங்கதேசம் மோதுகின்றன. களத்திற்கு வெளியே பார்த்தால், இந்தியா தான் வலுவான அணி. மேலும், வங்கதேச அணியில் இரண்டு தமிம், ஷகிப் என இரண்டு வீரர்கள் காயம் காரணமாக விளையாடவில்லை. அணியில் இருக்கும் முக்கிய வீரர்கள் சிலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. அந்த காயத்தோடு அவர்கள் ஆடி வருகிறார்கள். இதே பலவீனமான அணிதான், தன் விடாப்பிடியான போராட்டத்தால் பாகிஸ்தானை வீழ்த்தியது என்பதால் இந்தியா மிக கவனமாக வங்கதேசத்தை கையாள வேண்டும்.
இந்தியா பலம், பலவீனம்
இந்தியாவின் பலம் டாப் ஆர்டர் பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங். பலவீனம் மிடில் ஆர்டர் பேட்டிங் மட்டும் தான். நடுவரிசை பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். இந்தியாவின் தூணாக துவக்க வீரர்கள் ரோஹித் சர்மா, தவான் இருக்கிறார்கள். இவர்கள் வெளியேறினால் கொஞ்சம் தாங்கிப் பிடிப்பது அம்பதி ராயுடு மற்றும் தினேஷ் கார்த்திக் மட்டும் தான். பந்துவீச்சில் பும்ரா கலக்கி வருகிறார். அவர் பந்தில் ரன் எடுப்பதே எதிரணிக்கு பெரும்பாடாக உள்ளது. இந்திய சுழல் கூட்டணியும் விக்கெட்கள் வீழ்த்தி அழுத்தம் கொடுக்கின்றனர்.
வங்கதேச போராட்டம்
வங்கதேசத்தில் முஷ்பிகுர் ரஹீம் தான் பேட்டிங்கில் நின்று ஆடுகிறார். மிதுன் சில போட்டிகளில் அவருக்கு ஒத்துழைப்பு அளித்தார். மற்றபடி, அந்த அணியில் பேட்டிங் போராட்டம் தான். பந்துவீச்சில் மெஹிதி ஹாசன், ரஹ்மான், மொர்டாசா ஓரளவு நம்பிக்கை அளிக்கின்றனர். மற்றபடி, வங்கதேசத்தின் பலம், அவர்களின் போராட்டத்தில் தான் இருக்கிறது. இவர்களை வீழ்த்த இந்தியாவும் போராடி ஆக வேண்டிய கட்டாயத்தில் தான் இருக்கிறது. முக்கியமாக, இந்தியா இன்று தன் முழு பலம் கொண்ட அணியுடன் களம் இறங்க வேண்டும். அணியில் எந்த பரிசோதனை முயற்சியும் இன்று இருக்கக் கூடாது.