தொடர் விமர்சனங்கள்
ஹெட்டிங்லியில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா படுமோசமாக தோல்வியடைந்தது. இந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இதனால் தற்போதுவரை மூன்று டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருக்கின்றன. நான்காவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் செப்டம்பர் 2ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
விவாதம்
இந்நிலையில் 4வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் ப்ளேயிங் 11 குறித்து கருத்துக்கள் பரவத்தொடங்கியுள்ளது. குறிப்பாக கடந்த 3 டெஸ்ட் போட்டிகளிலும் பெரியளவில் சோபிக்காத ரிஷப் பண்ட் மீது விமர்சனங்கள் அடுக்கப்பட்டு வருகின்றன. தேவையில்லாத பந்துகளை அடித்து ஆட்டமிழக்கிறார். இவர் ஒருநாள், டி20 போட்டிக்குத்தான் சரிப்பட்டு வருவார் என பலரும் விமர்சித்து வருகின்றனர்.
நீக்கப்படுகிறாரா பண்ட்
எனவே 4வது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்டை குறிவைத்து அணியில் மிகப்பெரும் மாற்றம் நடைபெறவுள்ளதாக தெரிகிறது. ரிஷப் பண்டை வெளியேற்றிவிட்டு, கே.எல்.ராகுலை விக்கெட் கீப்பராக செயல்பட வைக்கப்படவுள்ளது. அதே போல பண்ட்-ன் இடத்திற்கு சூர்யகுமார் யாதவ் அல்லது ஹனுமா விஹாரி சேர்க்கப்படுகின்றனர் எனக்கூறப்படுகிறது.
முன்னாள் வீரர் கருத்து
இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக்ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின்போது ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி இந்தியாவுக்கு வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்தார். ஆனால், இங்கிலாந்து தொடரில் தொடர்ந்து படுமோசமாகச் சொதப்பி வருகிறார். இதற்கு காரணம் அவரது ஷாட் தேர்வுகள்தான். அவரது ஷாட்கள் மிக மோசமாக இருக்கிறது. இதனால், ரிஷப் பந்தை நீக்கிவிட்டு கே.எல்.ராகுலை விக்கெட் கீப்பராக நியமிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
கோலியின் சிந்தனை
பிராட் ஹாக் மட்டுமின்றி பல முன்னாள் வீரர்களும் இதே கருத்தினை தெரிவித்து வருகின்றனர். எனினும் ரிஷப் பண்ட்-ஐ நீக்குவது குறித்து விராட் கோலி தொடர்ந்து குழப்பத்தில் இருப்பதாகவும், அணியில் மாற்றத்தை கொண்டு வரும் பேச்சுக்கே அவர் தயாராக இல்லை எனவும் கூறப்படுகிறது.