சொதப்பல்
இதில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் 78/10 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தது. அதிகபட்சமாக ரோஹித் ஷர்மா 19 ரன்கள் அடித்தார். ஆண்டர்சன், ஓவர்டன் ஆகியோர் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
குவிந்த ரன்கள்
இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஓபனர்கள் ரோரி பர்ன்ஸ் (61), ஹசீப் ஹமீது (68) ஆகியோர் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். இதனால் மலமலவென ரன் உயர்ந்தது. இதன் பின்னர் வந்த டேவிட் மலான் (70), கேப்டன் ஜோ ரூட்டும் (121) ஆகியோர் மீண்டும் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததால், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 432 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணியை விட 354 ரன்கள் முன்னிலை பெற்றது.
மோசமான தோல்வி
இதனைத் தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்ஸ் களமிறங்கிய இந்திய அணி மூன்றாவது நாள் முடிவு வரை சிறப்பாக விளையாடியது. கோலி மற்றும் புஜாரா நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதனால் ஆட்டத்தில் சிறிது நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் நான்காவது நாள் முதல் செஷனின் படுமோசமாகச் சொதப்பி மொத்தம் 8 விக்கெட்களை அடுத்தடுத்து இழந்து, ஆல்-அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கோலி விளக்கம்
இந்திய அணியின் மோசமான தோல்விக் குறித்து பேசிய விராட் கோலி, ஸ்கோரை உயர்த்த வேண்டும் என்ற பிரஷரால் தான் இந்தியா 4வது நாளில் கூட திணறியதற்கு காரணம். நேற்றைய ஆட்டத்தின் போது நாங்கள் நன்று நிதானமாக ஆடினோம். முடிந்தவரை எதிர்த்து போராடினோம். ஆனால் மிடில் ஆர்டர் சரியாக விளையாடவில்லை. மிடில் ஆர்டர் சொதப்பியதால், மோசமான தோல்வியாக அமைந்தது. மேலும் இன்று இங்கிலாந்து பவுலர்கள் கொடுத்த அழுத்தம் மிக சிறப்பாக இருந்தது. இதனால் அவர் எதிர்பார்த்த முடிவை அவர்கள் பெற்றுவிட்டனர்.
தவறாக கணித்துவிட்டோம்
டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பான முறையில் விளையாடினால் தான் லோயர் ஆர்டரில் இருக்கும் வீரர்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கும். கடந்த 2 போட்டிகளிலும் அது சிறப்பாக இருந்தது. கிரிக்கெட்டில் இது போன்ற ஒரு சூழ்நிலை வரும் போது அதனை நினைத்து சோகத்தில் இருக்கக்கூடாது. அணி 36 ரன்களுக்கு ஆல் அவுட்டானால் கூட ஒற்றுமையுடனும், நம்பிக்கையுடனும் எதிர்த்து போராடுவோம். முதல் இன்னிங்ஸில் ஹெட்டிங்லி பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என நினைத்துவிட்டொம். அதற்கான விடை தான் இறுதியில் கிடைத்துவிட்டது என விளக்கமளித்துள்ளார்.