ஆண்டர்சனின் ஆக்ரோஷம்
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல் ஜோடி களமிறங்கியது. கடந்த போட்டியில் இருவரும் சிறப்பான தொடக்கம் கொடுத்திருந்ததால், இவர்கள் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அது முதல் ஓவரிலேயே பொய்யானது. ஆண்டர்சன் வீசிய முதல் ஓவரிலேயே ராகுல் டக் அவுட்டாகி வெளியேறினார். இதன் பின்னர் வந்த புஜாரா 1 ரன்னுக்கும், விராட் கோலி 7 ரன்களுக்கும் வந்த வேகத்தில் வெளியேறினர். கடந்த போட்டியில் சர்ச்சைகளுக்கு உள்ளான ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்த போட்டியில் முதல் 3 விக்கெட்களையும் சாய்த்து மிரட்டினார்.
அடுத்தடுத்து ஏமாற்றம்
டாப் ஆர்டரில் அடுத்தடுத்து விக்கெட்கள் சரிந்ததால், ரோஹித் ஷர்மா, துணைக்கேப்டன் ரஹானே இருவரும் பார்ட்னர்ஷிப் அமைக்க முயன்றனர். சிறிது நேரம் இவர்கள் தாக்குப்பிடித்த போதும் முதல் செஷன் கடைசி ஓவரில் ரஹானே 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன் பின்னர் வந்த எந்த வீரருமே இரட்டை இலக்க ரன்களை கூட அடிக்கவில்லை. ரிஷப் பந்த் 2 ரன்களுக்கு வெளியேற நீண்ட நேரமாக பார்ட்னர்ஷிப்புக்காக காத்திருந்த ரோகித் சர்மா ஒரு கட்டத்தில் ரோஹித் ஷர்மா 19 ரன்களுக்கு அவுட்டானார். கடந்த போட்டியில் 89 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த பும்ரா - ஷமி ஜோடி இந்த போட்டியில் டக் அவுட்டாகினர். இறுதியில் இஷாந்த் ஷர்மா 8 ரன்களும், சிராஜ் 3 ரன்களும் சேர்க்க முதல் இன்னிங்ஸில் 78 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டானது.
மோசமான சாதனை
டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி அடிக்கும் 3வது குறைந்த ஸ்கோராக இது பதிவாகியுள்ளது. கடந்த 1987ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 75 ரன்கள் அடித்ததே இந்தியாவின் குறைந்த ஸ்கோராக உள்ளது.
அசத்தல் தொடக்கம்
இதனையடுத்து தனது 2வது இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து அணி தொடக்கம் முதலே விடாப்பிடியாக விளையாடியது. தொடக்க வீரர்கள் ஹசீப் ஹமீத் மற்றும் ரோரி பேர்ன்ஸ் ஆகியோர் சிறப்பான அடித்தளம் அமைத்துள்ளனர். இந்திய வீரர்கள் திணறிய லீட்ஸ் பிட்ச்-ல், அதுவும் அதே நாளன்று தொடக்கம் முதலே அதிரடி காட்டினர் இந்த ஜோடி.
ஆட்ட நேர முடிவு
இந்திய வீரர்கள் எவ்வளவு முயற்சித்தும் இங்கிலாந்து அணியின் ஓப்பனிங் ஜோடியை பிரிக்கவே முடியவில்லை. இதனால் இருவருமே அரைசதம் கடந்து அசத்தினர். முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 120 ரன்களை எடுத்துள்ளது இங்கிலாந்து அணி. 125 பந்துகளை சந்தித்த ரோரி பேர்ன்ஸ் 52 ரன்களுடனும், ஹசீப் ஹமீத் 130 பந்துகளை சந்தித்து 60 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். இதன் மூலம் தற்போது வரை முதல் இன்னிங்ஸில் இந்திய அணியை விட 42 ரன்கள் முன்னிலை வகிக்கிறது இங்கிலாந்து அணி.