விமர்சனங்கள்
இந்திய அணியில் தவிர்க்க முடியாத வேகப்பந்துவீச்சாளராக வலம் வந்துக்கொண்டிருக்கும் ஜஸ்பிரித் பும்ரா, கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற இந்தியா - நியூசிலாந்து இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பெரியளவில் சோபிக்கவில்லை. கடைசி வரை எதிர்பார்க்கப்பட்ட போதும் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தாமல் ஏமாற்றினார். இதனால் பும்ரா மீதும் கடும் விமர்சனங்கள் எழுந்தன.
விமர்சனங்களுக்கு பதிலடி
ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலேயே அதற்கு பதிலடி கொடுத்தார். முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸிலேயே இங்கிலாந்து வீரர்களை திணறடித்த அவர், 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதே போல இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, மொத்தம் 9 விக்கெட்டுகளை கைப்பற்றி தன்னை மீண்டும் நிரூபித்துக் காட்டினார். இதன் பின்னர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் முக்கியமான 3 விக்கெட்டுகளை எடுத்து உதவினார். இதுவரை 2 போட்டிகளையும் சேர்த்து 12 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
வரலாற்று சாதனைக்கு வாய்ப்பு
இந்நிலையில் 3வது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை ஒன்றை படைக்க காத்துள்ளார். இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று ஹெட்டிங்கிலி-ல் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினால், டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் விளையாடி 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய பவுலர் என்ற சாதனையை படைப்பார்.
கபில் தேவ் முதலிடம்
முன்னாள் வீரர் கபில் தேவ் 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 100 விக்கெட்டுகளை வீழ்த்தி தற்போது வரை முதலிடத்தில் உள்ளார். இவரின் சாதனையை யாராலும் முறியடிக்க முடியவில்லை. ஆனால் ஜஸ்பிரித் பும்ரா தற்போது 22 போட்டிகளில் விளையாடி 95 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 3வது டெஸ்ட் போட்டியில் மட்டும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினால் நீண்ட வருட சாதனையை முறியடிப்பார்.
சாதகமான பிட்ச்
3வது டெஸ்ட் போட்டி நடைபெறும் ஹெட்டிங்லி களம் தொடக்கம் முதலே வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஒன்றாக இருந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி குறுகிய நேரத்தில் 3 விக்கெட்களை பறிகொடுத்தது. இந்த 3 விக்கெட்டுகளையும் வேகப்பந்துவீச்சாளர் ஆண்டர்சன் தான் எடுத்தார். எனவே முதல் இன்னிங்ஸிலேயே பும்ராவும் 5 விக்கெட்டுகளை எடுத்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.