ஓப்பனிங்கே அதிர்ச்சி
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், ரஹானே, புஜாரா, பண்ட் என அனைவரும் மீண்டும் ஏமாற்றம் அளித்தனர். கேப்டன் விராட் கோலி பொறுப்புடன் விளையாடி அரைசதம் அடித்தார். எனினும் அவர் 50 ரன்களுக்கு வெளியேறினார்.
ஷர்துல்
தடுமாறி வந்த இந்திய அணியை இறுதிகட்டத்தில் ஷர்துல் தாக்கூர் தூக்கி நிறுத்தினார். அதிரடியாக விளையாடிய அவர் 36 பந்துகளில் 57 ரன்களை விளாசினார். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 197 ரன்களை சேர்க்க முடிந்தது.
இங்கிலாந்து அணி
இந்தியாவின் ஸ்கோர் குறைவாக இருந்ததால், 3வது டெஸ்டை போன்றே ரன் அடித்துவிடலாம் என்ற எண்ணத்தில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் களமிறங்கினர். ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் ஜஸ்பிரித் பும்ரா. ஓப்பனிங் வீரர்கள் ரோரி பேர்ன்ஸ் மற்றும் ஹசீப் ஹமீத்தை அடுத்தடுத்து விக்கெட் எடுத்து மிரட்டினார். இதனால் அந்த அணி 6 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன் பிறகு உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளை எடுக்க இங்கிலாந்து விழிப்பிதுங்கியது. இதனையடுத்து களமிறங்கிய ஒல்லி போப் 81 ரன்களும், கிறிஸ் 50 ரன்களும் எடுத்து மிரட்ட அந்த அணி முதல் இன்னிங்ஸில் 290 ரன்கள் எடுத்தது. இன்று 3வது நாளில் இந்தியா தனது 2வது இன்னிங்ஸை தொடர்ந்து ஆடவுள்ளது.
வரலாற்று சாதனைக்கு வாய்ப்பு
இந்நிலையில் இன்றைய நாள் ஆட்டத்தில் ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை ஒன்றை படைக்க காத்துள்ளார். இந்த போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா இன்னும் 1 விக்கெட்டை எடுத்தால் , டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் விளையாடி 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய பவுலர் என்ற சாதனையை படைப்பார்.
கபில் தேவ் முதலிடம்
முன்னாள் வீரர் கபில் தேவ் 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 100 விக்கெட்டுகளை வீழ்த்தி தற்போது வரை முதலிடத்தில் உள்ளார். இவரின் சாதனையை யாராலும் முறியடிக்க முடியவில்லை. ஆனால் ஜஸ்பிரித் பும்ரா தற்போது 24 போட்டிகளில் விளையாடி 99 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இந்த போட்டியில் இன்னும் ஒரு விக்கெட்டை மட்டும் வீழ்த்தினால் நீண்ட வருட சாதனையை முறியடிப்பார்.