2வது இன்னிங்ஸ்
முதலில் பேட்டிங் செய்து, முதல் இன்னிங்ஸில் வெறும் 78 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்டாக, இங்கிலாந்தோ அருமையான பேட்டிங் சூழலில் 432 ரன்கள் சேர்த்தது. வழக்கம் போல், ஜோ ரூட் சதம் (121) அடிக்க, இங்கிலாந்து அணி 354 ரன்கள் என்ற அபாரமான லீடிங் சென்றது. இதன் பின்னர் விளையாடிய இந்திய அணி விரைவாக சுருண்டுவிடும் என எதிர்பார்த்த சூழலில் 278 ரன்களை குவித்தது. இதற்கு முக்கிய காரணம் சட்டீஸ்வர் புஜாராவே ஆகும்.
திடீர் ட்விஸ்ட்
புஜாரா பெரும்பாலும் நிதானமாகவே விளையாடுவார். அவரின் டொக்கு ஷாட்களால் ரசிகர்கள் பொறுமை இழந்துவிடுவார்கள். ஆனால் இந்த போட்டியில் திடீரென அதிரடி காட்டினார். புஜாராவின் ஸ்ட்ரைக் ரேட் வழக்கமாக 30க்கு கீழ் தான் இருக்கும். ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 50-க்கு குறையவேயில்லை. இங்கிலாந்தின் நட்சத்திர பவுலர்கள் ஆண்டர்சன், ராபின்சன் ஆகியோர் பல வகையாக யுக்திகளை கையாண்டபோதும் புஜாரா ரன்குவிப்பை தடுக்க முடியவில்லை. இதனால் அவர் அரைசதம் விளாசி, சதம் அடிப்பதற்கு அருகில் சென்றுவிட்டார். ஆனால் துரதிஷ்டவசமாக 91 ரன்களிலேயே அவர் அவுட்டாகி வெளியேறினார். 180 பந்துகளை சந்தித்த புஜாரா 15 பவுண்டரிகளுடன் 91 ரன்களை அடித்தார்.
கம்பேக் கொடுத்த புஜாரா
இந்நிலையில் புஜாராவின் கம்பேக்கை கண்டு முன்னாள் வீரர் அஷிஷ் நெஹ்ரா ஆச்சரியத்தில் உறைந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், புஜாரா இப்படி விளையாடி நான் பார்த்ததே இல்லை. அவர் எந்தவித தயக்கமும் இன்றி, தைரியமாக பந்தை அடித்து விளையாடுகிறார். அதிரடியாக விளையாட வேண்டும் என முன்கூட்டியே திட்டமிட்டுத்தான் அவர் களமிறங்கியது போல தெரிகிறது எனத் தெரிவித்தார்.
புதிய புஜாரா
புஜாரா அதிக டொக்கு வைத்து ஆடக்கூடியவர். மெதுவாக விளையாடுவார் என பலரும் விமர்சித்திருக்கிறார்கள். அப்படி அவர் விளையாடியும் 90 டெஸ்டிகளில் 6,000 ரன்களுக்குமேல் அடித்திருக்கிறார். இவர்போல மெதுவாக விளையாடி, இப்படி ரன்கள் அடிப்பது அசாத்தியமானதுதான். விமர்சகர்கள் எதாவது சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள். அதை காதில் போட்டுக்கொள்ள கூடாது. மூன்றாவது டெஸ்ட் இரண்டாவது இன்னிங்ஸில் மூலம் புஜாரா 2.0வை பார்த்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.