ஆண்டர்சனின் ஆக்ரோஷம்
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல் ஜோடி களமிறங்கியது. கடந்த போட்டியில் இருவரும் சிறப்பான தொடக்கம் கொடுத்திருந்ததால், இவர்கள் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அதனை முதல் ஓவரிலேயே பொய்யாக்கினார் ராகுல். ஆண்டர்சன் வீசிய முதல் ஓவரிலேயே ராகுல் டக் அவுட்டாகி வெளியேறினார். இதன் பின்னர் வந்த புஜாரா 1 ரன்னுக்கும், விராட் கோலி 7 ரன்களுக்கும் வந்த வேகத்தில் வெளியேறினர். கடந்த போட்டியில் சர்ச்சைக்குள்ளான ஆண்டர்சன் இந்த போட்டியில் முதல் 3 விக்கெட்களையும் சாய்த்து மிரட்டினார்.
அடுத்தடுத்து ஏமாற்றம்
டாப் ஆர்டரில் அடுத்தடுத்து விக்கெட்கள் சரிந்ததால், ரோஹித் ஷர்மா, துணைக்கேப்டன் ரஹானே இருவரும் பார்ட்னர்ஷிப் அமைக்க முயன்றனர். சிறிது நேரம் இவர்கள் தாக்குப்பிடித்த போதும் முதல் செஷன் கடைசி ஓவரில் ரஹானே 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன் பின்னர் வந்த எந்த வீரருமே இரட்டை இலக்க ரன்களை கூட அடிக்கவில்லை.
உடைந்த நம்பிக்கை
ரிஷப் பந்த் 2 ரன்களுக்கு வெளியேற நீண்ட நேரமாக பார்ட்னர்ஷிப்புக்காக காத்திருந்த ரோகித் சர்மா ஒரு கட்டத்தில் ரோஹித் ஷர்மா 19 ரன்களுக்கு அவுட்டானார். கடந்த போட்டியில் 89 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த பும்ரா - ஷமி ஜோடி இந்த போட்டியில் டக் அவுட்டாகினர். இறுதியில் இஷாந்த் ஷர்மா 8 ரன்களும், சிராஜ் 3 ரன்களும் சேர்க்க முதல் இன்னிங்ஸில் 78 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டானது.
மோசமான சாதனை
டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி அடிக்கும் 3வது குறைந்த ஸ்கோராக இது பதிவாகியுள்ளது. கடந்த 1987ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 75 ரன்கள் அடித்ததே இந்தியாவின் குறைந்த ஸ்கோராக உள்ளது. 2வதாக 2008ம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக 76 ரன்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ் மைதானம்
லீட்ஸ் மைதானம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கக்கூடியது என்று தெரிந்துமே இந்திய பேட்ஸ்மேன்கள் அவசரப்பட்டு ரன் அடிக்க முயன்று சொதப்பினர். எனவே இங்கிலாந்து அணியை 150 ரன்களுக்குள் சுருட்டினால் மட்டுமே, இந்த போட்டியில் இந்திய அணியால் மீண்டு வர முடியும். இல்லையென்றால் பெரும் போராட்டமாக இருக்கும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகின்றனர்.