5வது டெஸ்ட் போட்டி
சொந்த மண்ணிலேயே இங்கிலாந்து அணி 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்து இருப்பதால் அந்நாட்டு வீரர்கள் மீது ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். எனவே 5வது போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய வேண்டும் என மும்முரம் காட்டி வருகிறது. அதேவேளையில் தொடரை வெல்ல இந்திய அணியும் முனைப்பு காட்டி வருகிறது.
ஏமாற்றம் ரஹானே
இந்நிலையில் இந்திய அணியின் ப்ளேயிங் 11 குறித்து தகவல் வெளியாகியுள்ளது. பேட்டிங்கை பொறுத்தவரை சட்டீஸ்வர் புஜாரா தனது ஃபார்மை நிரூபித்து விட்டார். ஆனால் துணைக் கேப்டன் அஜிங்கியா ரஹானே இன்னும் திணறி வருகிறார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 7 இன்னிங்ஸில் விளையாடியுள்ள அவர் 109 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். அவரின் சராசரி ரன் 15.57 ஆகும்.
சூர்யகுமார் யாதவ்
இதனால் அவருக்கு மாற்றாக இந்த போட்டியில் ஹனுமா விஹாரி அல்லது சூர்யகுமார் யாதவை கொண்டு வரவுள்ளதாக கூறப்படுகிறது. ஹனுமா விஹாரிக்கு இங்கிலாந்து மண்ணில் விளையாடிய நல்ல அனுபவம் உள்ளது. அதேவேளையில் சூர்யகுமார் யாதவுக்கு ஒரு வாய்ப்பாவது கொடுக்க வேண்டும் என்ற எண்ணமும் கோலிக்கு உள்ளது. எனவே கடும் போட்டி நிலவி வருகிறது.
பவுலிங் படை
பந்துவீச்சை பொறுத்தவரை இந்த முறை ஒரே ஒரு மாற்றத்தை செய்ய இந்திய அணி முடிவெடுத்துள்ளது. அதாவது நட்சத்திர வீரரான ஜஸ்பிரித் பும்ராவுக்கு இந்த போட்டியில் ஓய்வளிக்கப்படவுள்ளது. இந்த தொடரில் இதுவரை அவர் 18 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். எனவே அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, மீண்டும் முகமது ஷமியை அணிக்குள் கொண்டு வரவுள்ளதாக தெரிகிறது. எது எப்படியோ, அஸ்வினுக்கு இந்த போட்டியிலும் வாய்ப்பு கொடுக்கப்படாது என்றே தெரிகிறது.
வாய்ப்பு கிடைக்காத அஸ்வின்
கடந்த 4 போட்டியிலும் வாய்ப்பளிக்கப்படாத சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்பு கொடுப்பது போல அஸ்வினுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த போட்டியிலும் அஸ்வினை சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தைக் கூட நடைபெறவில்லை. ஜடேஜாவை மட்டுமே விராட் கோலி நம்பி வருவதாக ரசிகர்கள் கடும் கோபமடைந்துள்ளனர். மேலும் கடைசி வரை அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுக்காமல் அலைக்கழிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.