5வது டெஸ்ட் போட்டி
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பிசியோதெரபிஸ்ட் உட்பட 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அணி வீரர்களுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டீவ் என முடிவு வந்தது. எனினும் கொரோனா அச்சுறுத்தல் இருப்பதாக கூறி 5வது டெஸ்ட் போட்டியில் விளையாட விரும்பவில்லை, ரத்து செய்துவிடலாம் எனக்கூறி பிசிசிஐ முடிவு செய்தது.
நஷ்டம்
கடைசி டெஸ்ட் போட்டி என்பதால் மிகப்பெரும் எதிர்பார்ப்புகளோடு இருந்த ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. இது மட்டுமல்லாமல், இந்திய அணியின் திடீர் முடிவால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு சுமார் ரூ.304 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஒளிபரப்பு உரிமையை பெற்ற நிறுவனத்திற்கு பணத்தை திரும்ப அளிக்க வேண்டும். அதே போன்று போட்டி நடைபெறவிருந்த ஓல்ட் ட்ராஃபர்ட் மைதானம் 20,000 பேருக்கு மேல் அமர்ந்து பார்க்க கூடியது. 5 நாட்களுக்கான டிக்கெட்களும் விற்றுத் தீர்ந்துள்ளன. எனவே அவர்களுக்கு பணத்தை திரும்பப் பெறும் பணி நடைபெற்று வருகிறது.
பெரும் பிரச்னை
இது ஒருபுறம் இருக்க போட்டியின் புள்ளிவிவரங்கள் என்ன என்பது குறித்து மிகப்பெரும் பனிப் போரே நடைபெற்று வருகிறது. போட்டி நடைபெறாததால் எந்தவித புள்ளிகளும் வழங்கப்படாமல் 2 - 1 என இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். ஆனால் இந்திய அணி தான் தாமாக முன்வந்து விலகியது, எனவே இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கோரி வருகிறது. அதற்கேற்றார் போல போட்டியின் வெற்றியாளரை நிர்ணயிக்க விசாரணை நடத்த வேண்டும் என ஐசிசிக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளது.
பிசிசிஐ-ன் முடிவு
இந்நிலையில் இந்த பிரச்னைக்கு ஒரு முடிவு கட்டுவதற்காக பிசிசிஐ புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதாவது இந்திய அணி அடுத்தாண்டு (2022) ஜூலை மாதத்தில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. எனவே அப்போது மீதமிருக்கும் ஒரு டெஸ்ட் போட்டியையும் நடத்தி முடித்துவிடலாம் என யோசித்துள்ளது. இதனை இங்கிலாந்து வாரியத்திடமும் தெரிவித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.