5வது டெஸ்ட்
இந்திய அணியில் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பவுலிங் பயிற்சியாளர், ஃபீல்டிங் பயிற்சியாளர், பிசியோ தெரபிஸ்ட் என மொத்தம் 4 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனையடுத்து அணி வீரர்கள் அனைவரும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு பல்வேறு கட்ட கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் வீரர்கள் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. எனினும் போட்டியை நடத்துவதற்கு பிசிசிஐ சம்மதம் தெரிவிக்கவில்லை.
ஆலோசனை
பிசிசிஐ - இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையே நீண்ட நேரமாக பரபரப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திய அணி 2 - 1 என தொடரில் முன்னிலை வகிப்பதால், அவர்கள் தான் வெற்றி என ஒருபுறம் கூற, மற்றொரு புறம், இந்தியா தானாக முன்வந்து வெளியேறுவதால், இங்கிலாந்து தான் வெற்றியாளர்கள் என்றும் விவாதிக்கப்பட்டது. இறுதியில் இந்த தொடரை முடிவு எட்டப்படாமல் நிறுத்திக்கொள்வதாகவும், கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டி வேறு ஒருநாள் திட்டமிட்டு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கு இரு நாட்டு வாரியங்களும் ஒப்புதல் வழங்கின.
பரவும் விமர்சனங்கள்
ஐபிஎல் தொடரை முக்கியமாக கருதி, சர்வதேச போட்டியை பிசிசிஐ கைவிடுவதாக விமர்சனங்கள் குவிந்தன. இந்நிலையில் இந்த போட்டியை எப்படியாவது நடத்தி முடித்துவிட வேண்டும் என்பதற்காக கேப்டன் விராட் கோலி போராடியிருப்பது தெரியவந்துள்ளது. அதாவது அவர் போட்டியை 2 நாட்கள் ஒத்திவைத்துவிட்டு, தாமதமாக கூட நடத்துவதற்கு ஆலோசனை தெரிவித்துள்ளார்.
கோலியின் செயல்பாடு
பிசிசிஐ- யை தொடர்பு கொண்டு பேசியுள்ள கேப்டன் கோலி இந்திய அணியில் வீரர்கள் அனைவருக்கும் கொரோனா நெகட்டீவ் என முடிவு வந்துள்ளது. எனவே 2 நாட்கள் மட்டும் ஒத்திவைத்துவிட்டு, போட்டியை ஞாயிற்று கிழமை கூட தொடங்கலாம் எனக்கூறியுள்ளார். இதற்கு பிசிசிஐ-ம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனையடுத்து இந்த முடிவினை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடமும் விராட் கோலி பகிர்ந்துள்ளார். ஆனால் அதற்கு பச்சைக்கொடி கிடைக்கவில்லை.
இங்கிலாந்து திட்டவட்டம்
போட்டியை நடத்துவது என்றால், தற்போதே நடத்த வேண்டும், இல்லையென்றால் வேறு ஏதாவது ஒருநாளில் நடத்திக்கொள்ளலாம் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தான் டெஸ்ட் போட்டி முடிவின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
காத்திருக்க வேண்டும்
கடைசி டெஸ்ட் போட்டி அடுத்த 2 மாதங்களில் நடத்த வாய்ப்பே இல்லை. ஏனென்றால் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 15ம் தேதி வரை ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ளது. இதே போல அக்டோபர் 17ம் தேதி முதல் நவம்பர் 14ம் தேதி வரை டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. எனவே டிசம்பர் மாதத்தில் வேண்டுமானாலும் மீதமுள்ள டெஸ்ட் போட்டியை நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதுவரை முடிவுக்காக ரசிகர்கள் காத்திருக்க வேண்டும்.