படு தோல்வி
முதல் இன்னிங்ஸில் இந்திய அணியை விட 27 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி 2வது இன்னிங்ஸில் 120 ரன்களுக்கு சுருண்டது. இதற்கு காரணம் 2வது இன்னிங்ஸில் கேப்டன் ஜோ ரூட் போட்ட தவறான கணக்கு தான். விக்கெட் எடுக்க முயற்சிப்பதை விட்டுவிட்டு பும்ராவை பழிவாங்கும் திட்டத்தை போட்டார். இந்த அதீத நம்பிக்கையே அவர்களுக்கு வினையாக அமைந்தது. எனவே 3வது டெஸ்ட் போட்டியில் தவறுகளை சரி செய்து கொண்டு பதிலடி கொடுக்க வேண்டும் என ஜோ ரூட் முனைப்பு காட்டி வருகிறார்.
இந்தியாவின் ப்ளேயிங் 11
இந்நிலையில் அதனை எதிர்க்கும் வகையில் இந்திய அணியின் ப்ளேயிங் 11 எப்படி இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை பிரித்வி ஷா வாய்ப்புக்காக காத்துள்ளார். முதல் 2 டெஸ்ட் போட்டியிலுமே ஓப்பனிங் வீரர்கள் ரோஹித் ஷர்மா மற்றும் கே.எல்.ராகுல் சிறப்பாக செயல்பட்டதால் பிரித்விக்கு மீண்டும் வாய்ப்பு இல்லை. இலங்கையில் இருந்து அவர் ஓப்பனிங்கிற்காக வரவழைக்கப்பட்ட போதும், பெஞ்சில் அமர வேண்டிய சூழலே உள்ளது.
இளம் வீரர்களின் காத்திருப்பு
இதே போல இலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட சூர்யகுமார் யாதவும் மீண்டும் பெஞ்சில் அமர வேண்டியுள்ளது. பல போட்டிகளிலும் சொதப்பி வந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள், புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் 2வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி விட்டதால் அவர்களுக்கான வாய்ப்பு இன்னும் உறுதியாக உள்ளது. அவர்கள் இருவரும் 2வது இன்னிங்ஸின் போது இந்திய அணி சறுக்கிய போது இக்கட்டான சூழலில் ரன் குவித்தனர்.
சூர்யகுமார் வேண்டும்
இந்நிலையில் சூர்யகுமார் யாதவுக்காக புஜாரா மற்றும் ரஹானேவை ப்ளேயிங் 11ல் இருந்து தூக்கலாம் என இங்கிலாந்து முன்னாள் வீரர் பரூக் இஞ்சினியர் தெரிவித்துள்ளார். சர்வதேச போட்டிகளில் சூர்யகுமார் யாதவின் செயல்பாடுகள் என்னை கவர்ந்துவிட்டது. நான் அவருடைய ரசிகர் ஆகிவிட்டேன். இவரால் மேட்ச் வின்னராக இருக்க முடியும். இதனால், புஜாரா அல்லது ரஹானேவுக்கு மாற்றாக சூர்யகுமாரை மூன்றாவது டெஸ்டில் களமிறக்க வேண்டும். மிக குறைந்த நேரத்தில் சதம் அடித்து அசத்தக் கூடிய திறமை சூர்ய குமாரிடம் உள்ளது. எனவே அவரை அணியில் சேர்க்கவேண்டும்.
தப்பு கணக்கு செய்துவிடக் கூடாது
லார்ட்ஸ் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றுவிட்டதால் அதே அணியை மீண்டும் களமிறக்கலாம் என யோசிக்கலாம். ஆனால் சூர்யகுமார் விவகாரத்தில் இந்திய அணி அந்த தவறை செய்துவிடக் கூடாது. ஹெட்டிங்லி மைதானம் ரன்களை குவிக்க சாதகமாக இருக்கும். இப்படிப்பட்ட மைதானத்தில் சூர்யகுமாருக்கு வாய்ப்பு கொடுத்தால், அவர் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாட நல்ல அடித்தளமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.