2வது டெஸ்ட் போட்டி
இந்த 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இரு அணிகளும் சம பலத்துடனே இருந்தது. அதாவது முதல் இன்னிங்ஸில் இந்தியாவை விட இங்கிலாந்து அணி 27 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. ஆனால் 2வது இன்னிங்ஸில் அவரின் பாட்ஷா பலிக்கவில்லை. அவர்களின் ரன் குவிப்புக்கு முகமது சிராஜ் முட்டுக்கட்டைப்போட்டதால் அந்த அணி 2வது இன்னிங்ஸில் 120 ரன்களுக்கு சுருண்டது.
பும்ரா - ஷமி
இங்கிலாந்து போன்ற கடினமான களத்தில் முன்னணி பேட்ஸ்மேன்களே ரன் எடுக்க திணறுகின்றனர். அப்படி இருக்கையில் பும்ரா மற்றும் ஷமி சிறிது நேரம் நின்றுவிட்டு விக்கெட்டை பறிகொடுத்திருப்பார்கள். ஆனால் இங்கிலாந்து வீரர்கள் வேண்டுமென்றே விக்கெட் எடுக்க முற்படாமல் பும்ராவை தாக்கும் வகையில் பந்துகளை வீசினர். இதுமட்டுமின்றி ஒவ்வொரு ஓவருக்கும் இடையே பும்ராவிடம் வம்பிழுத்தனர்.
காரணம்
இந்த டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில், இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, அந்த அணியின் சீனியர் பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பேட்டிங் செய்ய வந்த போது, இந்தியாவின் பும்ரா ஒரே ஓவரில் தொடர்ந்து பவுன்சர் பந்துகள் போட்டு தாக்குதல் நடத்தினர். இதில் ஆண்டர்சன் ஹெல்மெட், தோள்பட்டை, கால் என அனைத்து இடங்களிலும் தாறுமாறாக அடி வாங்கினார். பும்ரா வேண்டுமென்றே பவுன்சர் போட்டதாக நினைத்து கடுப்பான ஆண்டர்சன் பழிவாங்குவதற்காகவே தனது அணியினருடன் இன்று ஆட்டத்தில் அப்படி நடந்துக்கொண்டனர்.
விணை தேடிக்கொண்ட இங்கிலாந்து
இந்நிலையில் அவர்களின் திட்டம், சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதையை போல ஆகிவிட்டது. இங்கிலாந்து வீரர்களின் பந்துவீச்சை நன்கு புரிந்துக் கொண்ட முகமது ஷமி - பும்ரா ஜோடி பவுண்டரி, சிக்ஸர் என பேட்டை சுழற்றினர். இருவரும் சுதாரித்துக் கொண்டு காட்டிய அதிரடியால் 9வது விக்கெட்டிற்கு இந்த ஜோடி 77 ரன்களை குவித்தது. முகமது ஷமி 56 ரன்களும், ஜஸ்பிரித் பும்ரா 34 ரன்களும் விளாசினர். இதனால் 220 க்குள் முடியவேண்டிய இந்திய அணியின் ஸ்கோர் 298 ரன்களுக்கு சென்றது. அதிலும் விராட் கோலி டிக்ளர் செய்துவிட்டார். இல்லையென்றால் 300 ரன்களை கடந்திருக்கும். இதனால் அதிக ஸ்கோரை அடிக்க துரத்த முடியாமல் இங்கிலாந்து தோல்வியடைந்தது.
ரூட்
இந்நிலையில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட்டை சீனியர் வீரர் யாரோ ஒருவர் கட்டுப்படுத்தியதே தோல்விக்கு காரணம் என மைக்கேல் வாகன் குற்றம்சாட்டியுள்ளார். கடந்த சில வருடங்களில் இங்கிலாந்து அணியின் மிக மோசமான ஆட்டம் இதுதான். இப்படி ஒரு சொதப்பலை பார்த்ததே இல்லை. பும்ராவிடம் எதற்காக அதிக பவுன்சர்கள் வீசப்பட்டன. இங்கிலாந்து அணியை அப்போது ஜோ ரூட் வழிநடத்தவில்லை எனத்தெரிகிறது. ரூட் வேறு யாரோ சீனியர் வீரரின் பேச்சைக் கேட்டு தவறான வழியில் சென்றிருக்கிறார். அந்த சீனியர் வீரர் நிச்சயம் தனிப்பட்ட காரணங்களுக்காக ரூட்டை தவறாக வழிநடத்தியிருக்க வேண்டும்
பயிற்சியாளர் என்ன செய்தார்
பயிற்சியாளர் சில்வர்வுட் அப்போது என்னதான் செய்துக்கொண்டிருந்தார் எனத் தெரியவில்லை. குளிர்பானம் கொடுக்க மைதானத்திற்கு உள்ளே சென்ற ஏதாவது ஒரு வீரரிடம், ரூட் தவறான திட்டத்தை செயல்படுத்தி வருகிறார் எனக்கூறியிருக்க வேண்டும். ஆனால் மௌனம் காத்திருந்துள்ளார். சில்வர்வுட்டால் இங்கிலாந்து அணியை எந்த சரிவில் இருந்து வேண்டுமானாலும் மீட்டிருக்க முடியும். ஆனால் அப்படி நடக்கவில்லை எனக்கூறியுள்ளார்.