5வது டெஸ்ட் ரத்து
இந்திய அணியில் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா உறுதியானது. இதனை தொடர்ந்து பவுலிங் பயிற்சியாளர், ஃபீல்டிங் பயிற்சியாளர் உட்பட மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதியானது. பின்னர் வீரர்கள் அனைவரும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டனர். கொரோனா அச்சுறுத்தல் அதிகம் இருப்பதால் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதாகவும் இந்திய அணி அறிவித்தது. இதனையடுத்து ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
நீண்ட நேர ஆசோசனை
இந்த விஷயம் தொடர்பாக இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையே கடும் விவாதம் நடைபெற்றது. ஆட்டத்தை சில நாட்கள் கழித்து நடத்தலாம் என இங்கிலாந்து வாரியம் தெரிவித்தது. ஆனால் ஐபிஎல் தொடர் வரும் 19ம் தேதியன்று தொடங்கவுள்ளதால், அதற்கு பிசிசிஐ மறுத்துவிட்டது. மேலும் கடைசி டெஸ்ட் போட்டியை ஐபிஎல், டி20 உலகக்கோப்பை தொடர்கள் முடிந்த பின்னர் வேறு ஒருநாளில் நடத்திவிடலாம் என பிசிசிஐ தெரிவித்துவிட்டது.
வருவாய் பாதிப்பு
கடைசி டெஸ்ட் போட்டியை நடத்தாததால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதாவது தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம் மற்றும் டிக்கெட்கள் விற்பனை என சுமார் ரூ.304 கோடி வரை வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. போட்டி நடைபெறவிருந்த ஓல்ட் ட்ராஃபர்ட் மைதானம் 21,500 பேர் உட்கார்ந்து பார்க்கக் கூடிய ஸ்டேடியமாகும். இங்கு அனைத்து டிக்கெட்களும் விற்றுத் தீர்ந்ததால், அதற்கான பணத்தினை திரும்ப ஒப்படைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மீண்டும் சுற்றுப்பயணம்
நீண்ட நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனையில், இங்கிலாந்தின் வருவாய் இழப்பை சரிகட்ட புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதாவது டி20 உலகக்கோப்பை தொடர் முடிந்த பிறகு மீண்டும் இங்கிலாந்துக்கு ஒரு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரே ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் ஒருநாள் போட்டி தொடரை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.